அதிகமாக டீ குடிப்பவரா நீங்க.. உங்களுக்கு தாங்க ஆயுள் அதிகம்.. சூப்பர் செய்தி கூறிய ஆய்வு முடிவு
வாஷிங்டன்: தினமும் 2 கப் அல்லது அதற்கு மேல் டீ குடிப்பவர்கள், டீ குடிக்காதவர்களை காட்டிலும் அதிக வாழ்நாளை கொண்டிருப்பதாக தேசிய புற்றுநோய் நிறுவனத்தின்(என்சிஐ) ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் மக்களின் விருப்ப பானமாக டீ உள்ளது. ஒரு கப் டீ என்பது சோம்பலை முறித்து மனிதனை சுறுசுறுப்பாக்கும் என காலகாலமாக சொல்லப்பட்டு வரும். இது பலரும் அனுபவம் ரீதியாக உணர்ந்து இருக்கலாம்.
அதேவேளையில் அதிகப்படியாக டீ குடிக்கும் பழக்கம் உடலுக்கு கேடானது. இதனை தவிர்க்க வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் கூட மாறுபட்ட முடிவுகள் கிடைக்கின்றன. இதனால் டீ குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவது உண்டு.
உங்கள் ஆபிஸ்ல டீ, காப்பி குடுக்குற வேலை இருந்தா கொடுங்க.. ஆங்கரிடம் கேட்ட சத்யராஜ் பட காமெடி நடிகை
டீ தொடர்பான ஆய்வு
இந்நிலையில் தான் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் என்சிஐ எனும் தேசிய புற்றுநோய் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. 2006 முதல் 2010 வரையிலான பிரிட்டன் பயோபேங்க்கில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மனிதர்களின் உடல்நலம் குறித்த தரவுகளை பயன்படுத்தி டீ தொடர்பான மதிப்பீட்டுக்கான ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக தனித்தனி பதிவேடுகள் பயன்படுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
வாழ்நாள் அதிகரிப்பு
இந்த ஆய்வின்படி 85 சதவீதம் பேர் டீ குடிப்பவர்கள். டீ குடிப்பவர்களில் 89 சதவீதம் பேர் பிளாக் டீ குடிக்கம் வழக்கத்தை கொண்டவர்கள். இந்த ஆய்வின் முடிவுகள் அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 2 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிப்பவர்களின் வாழ்நாளானது டீ குடிக்காதவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது. பால் கலந்த டீயை காட்டிலும் குறிப்பாக பிளாக் டீ குடிப்பவர்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கிரீன் டீ அதிகமானவர்கள் குடிப்பதாக கூறிய நிலையில் இந்த ஆய்வானது பிளாக் டீ தான் அதிகமானவர்கள் குடிப்பதாக தெரிவித்துள்ளது.
இறப்புக்கான ஆபத்து குறைவு
இந்த ஆய்வின்படி 29 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வரை டீ குடிப்பதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் 4 முதல் 5 கப் வரை டீ குடிப்பதாகவும், 12 சதவீதம் பேர் 6 முதல் 7 கப் வரை டீ குடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டீ குடிக்காதவர்களை ஒப்பிடும்போது தினமும் இரண்டு கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிப்பவர்களின் வாழ்நாள் காலம் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. அதாவது டீ குடிப்பவர்களுக்கு டீ குடிக்காதவர்களை ஒப்பிடும்போது இறப்புக்கான ஆபத்து 9 முதல் 12 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
பிளாக் டீ ஆரோக்கிய பானம்
இதுபற்றி தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டின் புற்றுநோய்-தொற்றுநோயியல் மற்றும் மரபியல் பிரிவின் டாக்டர் மக்கி இனோ-சோய் கூறுகையில், ‛‛ஆய்வில் பங்கேற்றவர்களிடம் பால் சேர்க்காமல் கருப்பு நிற டீ குடிக்கும் மக்களிடம் ஒரே மாதிரியான முடிவுகளை கண்டோம். இருப்பினும் டீயில் உள்ள பால் மற்றும் சர்க்கரையின் அளவை பொறுத்து பொதுமக்களின் இறப்பு அபாயத்தின் அளவு என்பது மாற்றமடையவில்லை. இருப்பினும் கொழுப்பு நிறைந்த பால் மற்றும் சர்க்கரையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கூறுகிறோம். மேலும் பிளாக் டீ குடிப்பது என்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பதை காட்டிலும் ஆரோக்கியமான பானம் என வைத்து கொள்ளலாம்.
பிரிட்டன் தேர்வு ஏன்?
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகளவில் டீ தான் குடிக்கின்றனர் என ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் அயர்லாந்திற்கு அடுத்தபடியாக தேயிலை பயன்பாட்டில் உலகளவில் 3ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இங்கு தினமும் சுமார் 100 மில்லியன் கப் டீ குடிக்கப்படுகின்றன. கேமிலியா சினென்சிஸ் புஷ் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பு தேநீர் சுவை நிறைந்ததாக கருதப்பட்டு வரும் நிலையில் பிற தேயிலைகளை விட அதிக காபின் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.