ட்விட்டர் "பாட்" எண்ணிக்கையை சொல்லுங்க.. ஒப்பந்தத்தை தொடருவோம்.. விடாப்பிடியாக சொன்ன எலான் மஸ்க்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனம் பயனர்களின் கணக்கு விவரங்களை 'ஸ்பேம் போட்' கணக்கா அல்லது உண்மையான பயனர்களா? என்பதை தெளிவுபடுத்தினால் 44 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை தொடரலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங் ஆகிய நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏபரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார்.
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். மேலும் அதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றன.

போலி கணக்குகள் இருப்பதாக
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், அது பற்றிய முழுமையான தகவல்களை தராததால், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட போவதாகவும் எலான் மஸ்க் கடந்த மாதம் 8 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் டிவிட்டர் நிறுவன பங்குகள் 7 சதவீதம் சரிந்தன. 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. எலான் மஸ்கின் இந்த திடீர் முடிவால் அதிருப்தியடைந்த ட்விட்டர் நிறுவன தலைவர் பிரட் டெய்லர், எலான் மஸ்க்கிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

164 பக்கங்கள் கொண்ட ஆவணம்
அதன்படி, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என்று டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரி நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து ட்விட்டருக்கு போட்டியாக எலான் மஸ்க் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 164 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணத்தில் எலான் மஸ்க் தரப்பு, ''ட்விட்டருடன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டதாக கூறியிருக்கிறார்''.

ட்விட்டர் நிறுவனம் பதிலடி
மேலும், டிவிட்டரில் உண்மையான பயனர்களின் எண்ணிக்கையை டிவிட்டர் நிறுவனம் மறைத்து விட்டதாக சாடியிருக்கும் எலான் மஸ்க், 238 மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இருப்பதாகவும் இந்த பயனர்கள் ட்விட்டரில் தோன்றும் விளம்பரத்தை பார்க்கக்கூடியவர்கள் என்றும் இதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்று ட்விட்டர் கூறியது. ஆனால், உண்மை எண்ணிக்கை 65 மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது" எனவும் தனது பதில் மனுவில் எலான் மஸ்க் தரப்பு தெரிவித்தது. எலான் மஸ்க் தாக்கல் செய்த அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த ட்விட்டர் நிறுவனம், ''ஒப்பந்தத்தை மீறுவதற்காக நம்ப முடியாத, முரண்பாடான சாக்கு போக்குகளை எலான் மஸ்க் கூறுவதாக'' பதிலடி கொடுத்துள்ளது.

ஒப்பந்தத்தை தொடரலாம்
மேலும், 'எலான் மஸ்க் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருப்பதாகவும்' ட்விட்டர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் இந்த எதிர்மனு குறித்து எலான் மஸ்க் தரப்பினர் கருத்து கூற மறுத்துவிட்டனர். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் பயனர்களின் கணக்கு விவரங்களை 'ஸ்பேம் போட்' கணக்கா அல்லது உண்மையான பயனர்களா என்பதை எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்ற சில விவரங்களை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்தால் 44 பில்லியன் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை தொடரலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் சவால்
இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''100 டிவிட்டர் பயனர்களின் கணக்குகளை மாதிரியாக கொண்டு, ஒரு கணக்கு எப்படி உண்மையானது என்பதை எப்படி வரையறுக்கப்படுகிறது'' என்பதற்கான முறையை கூறினால் இந்த ஓப்பந்தம் அசல் விதிகளின் படி முன்னெடுத்து செல்லப்படும். ஆனால் இதில் தவறுகள் கண்டறியப்பட்டால் இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்படாது' என்றார். முன்னதாக, டிவிட்டரில் உள்ள போட் அக்கவுண்ட்டுகள் குறித்து பொது விவாதத்திற்கு தயாரா? என ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கு எலான் மஸ்க் சவால் விடுத்து இருந்தார்.
Recommended Video

5 சதவீதத்திற்கும் கீழாக
ஆனால், எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க டிவிட்டர் நிறுவனம் மறுத்துவிட்டது. ட்விட்டரில் உள்ள மொத்த பயனர்களில் போலி ஸ்பேம் கணக்குகள் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழாக உள்ளதாக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (SEC) ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருந்தது. எனினும், இது சற்று அதிகமாக இருக்கலாம் என்ற மறுப்புடன் ட்விட்டர் இந்த விவரங்களை வெளியிட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications