கமலா ஹாரிஸ் குடும்பத்திலிருந்து ஆவேச குரல்.. "இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்" மீனா அழைப்பு
வாஷிங்டன்: டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு இப்போது சர்வதேச நாடுகளின் பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ், ஒரு படி மேலே போய், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில் முக்கியமாக செயலாற்றிய நபர்களில் ஒருவர் மீனா ஹாரிஸ். பிரச்சார வியூகங்களிலும் முக்கிய பங்காற்றினார்.
எனவே, கமலா ஹாரிஸ் கொள்கைகளில் அவர் செல்வாக்கு செலுத்த முடியும். இந்த நிலையில்தான், அவர் இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி கூறிய கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
முடக்கம் செய்யப்பட்ட... விவசாயிகள் போராட்டம் தொடர்பான டுவிட்டர் கணக்கு மீண்டும் மீட்டெடுப்பு!
ரிஹானா ட்வீட்
ஏற்கனவே சர்வதேச பிரபல பாடகி, ரிஹானா இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, "நாம் ஏன் பேசவில்லை" என்று கேள்வி எழுப்பி, சிஎன்என் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இன்னொருபக்கம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் க்ரெட்டா தன்பர்க் இந்த பிரச்சினை பற்றி சர்வதேச ரீதியில் குரல் கொடுத்துள்ளார்.
|
அமெரிக்க உறவு
ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுடன் உறவு பலப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த விவசாயிகள் போராட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மீனா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளது, இருநாட்டு சர்வதேச உறவுகள் வரை எதிரொலிக்குமோ என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன என்கிறார்கள் சர்வதேச அரசியல் விவகார துறையினர்.
ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகிறது
மீனா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கூறுகையில், உலகத்தின் பழமையான ஜனநாயகம் கொண்ட நாட்டில் ஒரு மாதத்துக்கு முன்புதான் தாக்குதல் நடந்தது. அதற்குள்ளாக, உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. விவசாயிகள் போராட்டத்தை துணை ராணுவத்தை கொண்டு ஒடுக்குவதையும், இணையதளம் துண்டிக்கப்படுவதற்கும் எதிராக, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு மீனா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
புகைப்படம்
"விவசாயிகளை கொல்லாதீர்கள்" என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் விவசாயிகள்.. அதிலும் குறிப்பாக அதிக அளவில் பெண்கள்.. பங்கேற்றுள்ள போராட்டத்தின் புகைப்படத்தை அவர் ஷேர் செய்து உள்ளார். உலகின் பழமையான ஜனநாயகத்தில் நடைபெற்ற தாக்குதல் என்று, அமெரிக்க நாடாளுமன்றமான கேப்பிட்டல் வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலை மீனா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை
டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வன்முறையை நடத்தினர். இது உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த தாக்குதலுக்கும் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக ஒப்பிட்டு பேசியுள்ளார் மீனா ஹாரிஸ்.
சர்வதேச கவனம்
சர்வதேச அளவில் இந்திய விவசாயிகள் போராட்டம் கவனம் ஈர்க்கப்பட தொடங்கி உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று எதிர்பார்த்து விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.