பணிநீக்க விவகாரத்தில் தலையிடுகிறது மத்திய அரசு.. அமேசானுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் சம்மன்
வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை லே ஆஃப் செய்ய தொடங்கியிருக்கும் நிலையில், அமேசான் நிறுவனம் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் கூட்டமைப்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க அமேசான் இந்தியாவுக்கு மத்திய அரசு சம்மன் விடுத்துள்ளது.
உலகளாவிய நாடுகளில் Recession எனும் உலகளாவில் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பெரிய பெரிய நிறுவனங்கள் கூடும் பொருளாதார இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. இதையடுத்து பல முன்னணி நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்து வருகிறது.
அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் நிறுவனங்களும் லே ஆஃப் எனப்படும் பணி நீக்க நடவடிக்கையை அடுத்தடுத்து எடுத்து வருவது, அந்த துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

13 சதவீதம் ஆட்குறைப்பு நடவடிக்கை
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் போனதும் முதல் நடவடிக்கையாக எலான் மஸ்க் 50 சதவீதம் பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் அமைப்பான மெடாவும் 13 சதவீதம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. இதனால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம்
கூகுள் நிறுவனத்தின் சரியாக பணியாற்றாத ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை நீக்க பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு எதிராக ஐடி நிறுவன ஊழியர்களின் கூட்டமைப்பான NITES மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் இது தொடர்பாக மனு அளித்து இருந்தது.

நேரில் ஆஜராகுமாறு சம்மன்
இந்த மனுவில், நெறிமுறைகளுக்கு மாறான மற்றும் சட்டவிரோதமாக அமேசான் ஊழியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், அமேசான் இந்தியாவிற்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் விடுத்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நல அமைச்சகம் விடுத்துள்ள சம்மனில், சட்ட விரோதமான பணி நீக்க புகார்கள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பெங்களூருவில் உள்ள துணை தலைமை தொழிலார் ஆணையர் முன்பாக ஆதிகாரப்பூர்வ பிரநிதி நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாத நோட்டீஸ் பிரீயட் கொடுக்காமலும்
NITES அமைப்பின் தலைவர் ஹர்பிரித் சிங் சலுஜா கூறுகையில், "அமேசான் இந்தியா தொடங்கியிருக்கும் சட்ட விரோதமான பணி நீக்க நடவடிக்கையை NITES வன்மையாக கண்டிக்கிறது. அமேசான் கொள்கைகளை விட இந்த நாட்டின் சட்டம் தான் உயர்ந்தது. தொழிலாளர் சட்ட விதிகளின் படி, அரசின் அனுமதியின்றி எந்த ஒரு பணியாளரையும் லே ஆஃப் செய்ய முடியாது. ஒருவருடத்திற்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 மாத நோட்டீஸ் பிரீயட் கொடுக்காமலும் அரசிடம் உரிய அனுமதி பெறாமலும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது" என்றுதெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில்..
அமேசான் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 3 சதவீதம் பேர் அதாவது 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளது. மந்த நிலை அச்சத்தால் இந்த முடிவை ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டும் பிசினஸ் சூழலுக்கு ஏற்பட ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று அமேசான் நிறுவன சி இ ஓ ஆண்டி ஜஸ்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications