இவ்வளவு பேரா? அமெரிக்காவில் அலறும் இந்தியர்கள்.. பறிபோகும் வேலைகள்.. ஐடி ஊழியர்கள் ஷாக்!
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்கள், அதிகாரிகளை பணி நீக்கம் செய்து வருகிறது.
வாஷிங்டன்: மந்தநிலையை காரணம் காட்டி அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. 2022 நவம்பர் முதல் ஆள்குறைப்பு நடவடிக்கையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து தவித்து வருவதாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
பணவீக்கம், பொருளாதார மந்த நிலை ஆகியவை நிலவி வருவதாக கூறி உலக நாடுகளில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
பல நாடுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் பெரிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆள்குறைப்பு நடவடிக்கை
இதனால் பல நிறுவனங்கள் தங்களின் செலவினங்களை குறைக்கவும், பொருளாதார இழப்பை சரிசெய்யவும் திட்டமிட்டு வருகின்றன. முதற்கட்டமாக பொருளாதார இழப்பை சரிசெய்யும் வகையில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது உலக பெரும் பணக்காரராக உள்ள எலான் மஸ்க் உரிமையாளராக உள்ள ட்விட்டர் உள்பட பல நிறுவனங்கள் ஆள்குறைப்பில் ஈடுபட்டுள்ளன.

கூகுள், ட்விட்டர்
இதனால் ஊழியர்கள், அதிகாரிகள் எந்த வித முன்னறிவிப்பு இன்றியும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்த பொருளாதார மந்தநிலை என்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது.

40 சதவீதம் இந்தியர்கள்
தற்போதைய சூழலில் அமெரிக்காவில் ஐடி சார் பணிகளில் மட்டும் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஏராளமான இந்தியர்கள் அடங்கும். அதாவது 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ‛தி வாஷிங்டன் போஸ்ட்' எனும் பத்திரிகை விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில்

80 ஆயிரம் இந்தியர்கள்
‛‛கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஐடி துறையில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், ட்விட்டர் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இந்த ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மென்பொருள் வல்லுநர்களாக பணியாற்றி வந்த நிலையில் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் சுமார் 80 ஆயிரம் பேர் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய சிக்கல்
அமெரிக்காவில் உள்ள ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 10,000 அதிகமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் தற்பாது வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வேலையிழந்தவர்கள் பெரும்பாலும் எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்கா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் புதிய சிக்கலை சந்தித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications