"இரு புது வகை ஓமிக்ரான்கள்".. எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வாளர்கள்! வேக்சின் பலன் தருமா
வாஷிங்டன்: ஓமிக்ரான் கொரோனாவில் சில குறிப்பிட்ட வகைகளால் கொரோனா அடுத்த அலை ஏற்படும் ஆபத்துகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளிடையே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசுகள் தொடங்கி, பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனா வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், உலக நாடுகளில் அடுத்தடுத்த அலைகளை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா வைரசை முழுவதுமாக அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
அதாவது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உலகெங்கும் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆல்பா. டெல்டா போன்ற கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இதனால் உயிரிழப்புகள் ஒரு புறம் ஏற்பட்டது என்றால், பொருளாதார பாதிப்பும் மறுபுறம் மிக மோசமாக ஏற்பட்டது. இதனால் சீனா தவிர உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அடுத்த அலை
இப்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், மீண்டும் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனிடையே ஓமிக்ரான் கொரோனாவின் இரண்டு குறிப்பிட்ட வகைகள் அடுத்த அலையை உருவாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேக்சின் பணிகளால் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு வகை ஓமிக்ரான
ஓமிக்ரான் கொரோனாவின் BA.4 மற்றும் BA.5 வகைகளை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மாதம் தான் இந்த இரு வகை உட்பிரிவுகளை உலக சுகாதார அமைப்பு அதன் கண்காணிப்பு பட்டியலில் சேர்த்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 39 பேரிடம் இருந்து பெற்ற ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 15 பேர் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டு இருந்தனர்.

வேக்சின் முக்கியம்
வேக்சின் எடுத்துக் கொள்ளாதவர்கள் உடன் ஒப்பிடும் போது, வேக்சின் போட்டுக் கொண்டவர்களால் கொரோனா வைரசை 5 மடங்கு எளிதாக அழிக்க முடிகிறது. வேக்சின் போடாதவர்களின் உடல்களில் உருவாகும் ஆன்டிபாடிகளின் அளவு ஓமிக்ரான் BA.4 மற்றும் BA.5 வகைகளுக்கு எதிராக 8 மடங்கு குறைவாகவே உள்ளது. வேக்சின் போட்டவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் அதிகமாகவே தோன்றுகிறது.

அடுத்த அலை
இதன் காரணமாகத் தென்னாப்பிரிக்கா எதிர்பார்த்ததை விட முன்னதாகவே கொரோனா 5ஆம் அலைக்குள் நுழையும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஓமிக்ரான் BA.4 மற்றும் ஓமிக்ரான் BA.5 Omicron வகைகளால் அடுத்த அலை ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வெறும் 30% மக்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. இதனால் 5ஆம் அலை மிக விரைவில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications