‛‛திருடன்.. திருடன்..’’அமெரிக்காவில் அவமானப்பட்ட பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் டார்..பரவும் வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லஸ் சர்வதே விமான நிலையத்தில் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டாரை பார்த்து சிலர் ‛‛திருடன்.. திருடன்.. திருடன்..'' என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். சமீபத்தில் அவருக்கு ஆதரவு அளித்த கட்சியினர் ஆதரவை திரும்ப பெற்றனர்.
இதையடுத்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்தன.
சபாஷ்! தாய் மொழியில் மருத்துவம்.. எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இந்தியில் பாடங்கள்! மாணவர்கள் வரவேற்பு
பொருளாதார நெருக்கடி
புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். இவர் பதவியேற்ற காலத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனை சரிசெய்து பொருளாதாரத்தை மீட்பது மிகவும் முக்கியமாகும். இதற்கான நடவடிக்கையை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் பாகிஸ்தானின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என கூறப்படுகிறது.
கனமழையால் கூடுதல் பாதிப்பு
இதனால் அந்த நாட்டில் உணவு, பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும் சமீபத்தில் பெய்த பருவமழையால் பாகிஸ்தானின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்த நிலையில் நாட்டின் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கி உள்ளது. இந்த கனமழையால் 1,700 பேர் இறந்த நிலையில் 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். மேலும் 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானை இந்த கனமழை இன்னும் ஆபத்தில் தள்ளியது. இதனால் பொருளாதார பிரச்சனையை சரிசெய்ய பல்வேறு வகைககளில் ஷெபாஸ் ஷெரீப் அரசு முயன்று வருகிறது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் உதவி கோரியுள்ளது.
அமெரிக்காவில் நிதி அமைச்சர்
இந்நிலையில் தான் உலகளாவிய கடன் வழங்கும் நிறுவனங்களாக உள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உடனான வருடாந்திர சந்திப்பு அமெரிக்காவில் நடந்தது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் டார் அமெரிக்கா சென்றார். டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிதி அமைச்சர் இஷாக் டார், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் உள்பட பிற அதிகாரிகளுடன் அவர் நடந்து செல்கிறார்.
திருடன் திருடன் கோஷம்
அப்போது நிதி அமைச்சர் இஷாக் டாரை பார்த்த சிலர், ‛‛நீங்கள் ஒரு பொய் பேர்வழி. திருடன்'' என தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவிட்டனர். தற்போது இதுதொடர்பான வீடியா இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. பாகிஸ்தானில் நிதி அமைச்சராக மிப்தா இஸ்மாயில் இருந்த நிலையில் அவரிடம் இருந்த பொறுப்பு இஷாக் டாரிடம் வழங்கப்பட்ட நிலையில் அவரை சிலர் அவமானப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பின்னணியில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கலாம் என ஆளும் கட்சி தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
முதல் முறையல்ல...
பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களிலும், உள்நாட்டிலும் பொது இடங்களில் வைத்து கேலி, கிண்டலுக்கு உள்ளாவது இது முதல் முறைல்ல. இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டன் காபி ஷாப்பில் ஐடி அமைச்சர் மரியம் அவ்ரங்கஷீப் தாக்கப்பட்டார். கடந்த ஏப்ரலில் சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சென்ற நிலையில் அங்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக இம்ரான் கான் ஆட்சியின்போது திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் உணவகம் ஒன்றில் அவமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.