கொரோனாவுக்கு எதிரான போரில் 'திருப்புமுனை'.. குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசியே பெஸ்ட்
வாஷிங்டன்: 5 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசியின் 2 டோஸ் போதிய பாதுகாப்பை அளிப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை என மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்த பெருந்தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பைசர்
இதனிடையே, 5 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி போதிய பாதுகாப்பு அளிப்பதாகப் பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. வைரஸை தாக்கி அழிப்பதற்கு போதுமான நோய் எதிர்ப்புச் சக்தியை பைசர் தடுப்பூசி அளிப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இதற்கு விரைவில் ஒப்புதல் பெற பைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இரண்டு டோஸ்
இது குறித்து வெளியான அறிக்கையில், "12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டோசில் 30 மைக்ரோ கிராம் அளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், 5 முதல் 11 வயதிலான குழந்தைகளுக்கு 20 மைக்ரோ கிராம் அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு டோஸ் தடுப்பு செலுத்தப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பு செலுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு, தடுப்பூசி பாதுகாப்பாக இருப்பதும் பொறுத்துக் கொள்ளும் வகையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் போதுமான அளவு நோய் எதிர்ப்புச் சக்தி தடுப்பூசியால் உண்டாகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஐரோப்பிய மருந்து முகமை உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இதுகுறித்த தரவுகளை விரைவில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்கு வேக்சின்
ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்காவில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது 240 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குழந்தைகளுக்கு வேக்சின் தேவை எந்தளவு தேவை என்பதை உணர்த்துகிறது. 5 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த அனுமதி பெறுவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் அடித்தளமாக அமைந்துள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை அவசரக்கால அனுமதியைப் பெறுவதற்குக் குறிப்பிட்ட தரவுகளைச் சமர்ப்பிப்பது அவசியமாகிறது. அதற்கு ஏற்றவாறு தகுந்த தரவுகள் சமர்ப்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து, முழுமையான ஒப்புதலைப் பெறப் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தரவுகள் சமர்ப்பிக்கப்படும்.
சர்வதேச நாடுகளில் ஆய்வு
மழைக் காலத்திற்கு முன்பாகவே இது குறித்த தரவுகள் சமர்ப்பிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கும் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கும் தனித்தனியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு அதற்கான தரவுகள் இந்தாண்டின் நான்காவது காலாண்டுக்குள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, பின்லாந்து, போலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள 90க்கும் மேற்பட்ட ஆய்வு மையங்களில் 6 மாதம் முதல் 11 வயது வரையிலான நான்காயிரத்து 500 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.