கொரோனாவை குணமாக்க மாத்திரை... 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்க அமெரிக்காவில் ஒப்புதல்
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
வாஷிங்டன்: பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று நோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.பேக்ஸ்லோவிட் என்னும் இந்த மாத்திரையானது லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி இருந்தது.இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு FDA எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89% குறைந்து விடும். வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கொடநாடு கொலை : சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்
இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், அந்த ஆபத்து 88% குறைந்துவிடும் என, பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.
மாத்திரையின் செயல்திறன்
இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் 0.7% பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
நோயாளிகளுக்கு மாத்திரை
இதுபற்றி பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறும்போது, "இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றவும், மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகளை வெளியேற்றவும் உதவும் ஆற்றல் உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில், வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.
அமெரிக்கா அனுமதி
இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில் , 'பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம்.அதில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களும் அடங்குவர். இந்த மாத்திரையை கொடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்களில் இருந்து
மரபணு மாறிய ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதை தடுப்பூசி செலுத்துவதால் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. பேக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஓமிக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்று தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறியுள்ளார்.