கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி.. மனிதர்களுக்கும் பரிசோதனை
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை குரங்குகளுக்கு போட்டு நடத்திய சோதனை வெற்றி பெற்றுள்ளது. குரங்குகளை கொரோனாவில் இருந்து இந்த தடுப்பூசி காப்பாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் கொரோனாவுக்கு எதிராக சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த முயற்சி ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 56 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதில் 3,51,668 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,725,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக பட்சமாக 100,580 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் மரணங்கள் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எப்படியாது மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்று பல ஆயிரம் கோடிகளை ஆராய்ச்சிக்காக முதலீடு செய்துள்ளது அமெரிக்கா. இதனால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
உலகில் முதல் முறையாக புதிய உச்சம்.. கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் மரணம்
கொரோனா அழிப்பு
இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் புதிய நம்பிக்கை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டியாகோனஸ் மெடிக்கல் சென்டரின் ஆராய்ச்சியாளர்களின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து ரீசஸ் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் உடலில் ஆன்டிபாடிகள் எண்ணிக்கை அதிகரித்து, அவை கொரோனா வைரசை முற்றிலும் அல்லது பெருமளவு அழித்து அதன் உற்பத்தியை தடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நல்ல திருப்பம்
மேலும், தடுப்பூசி போடப்பட்ட 35 நாட்களுக்குப் பிறகு குரங்குகளின் மூக்கில் கொரோனா வைரஸ் தெளிக்கப்பட்டும் சோதிக்கப்பட்டது. இதில் தடுப்பு மருந்து வைரசை அழித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆராய்ச்சி முடிவு கொரோனா வைரசுக்கு எதிரான பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவுக்கு எதிராக மனிதர்கள் வலுவான, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது உறுதியாகி உள்ளது.
விரைவில் ஆய்வு
அடுத்தகட்டமாக மனிதர்கள் உடலில் செலுத்தி ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. குரங்குகளிடம் வெற்றிகரமாக சோதனை நடந்துள்ளதால், கொரோனாவுக்கு எதிராக சக்தி வாய்ந்த மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனிடையே அமெரிக்காவின் நோவாவேக்ஸ் பயோடெக்னாலஜி நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்தது.
தன்னார்வலர்களிடம் ஆய்வு
NVX-CoV2373 என்று அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி கடந்த ஏப்ரலில் உருவாக்கப்பட்டது. அந்த தடுப்பூசியை முதல் கட்டமாக விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நோவாவேக்ஸ் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 131 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதித்துள்ளது. இந்த பரிசோதனையில், தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து வரும் ஜூலையில் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் கிடைக்கும். அப்போது அந்த மருந்து எப்படி செயல்பட்டது என்பது தெரிந்துவிடும்.