ஊருக்குள் வந்த கப்பல்.. கொத்தாக சாய்ந்த மரங்கள்! அப்படியே பறந்த ரிப்போர்ட்டர்! அலறவிட்ட இயன் சூறாவளி
வாஷிங்டன்: மிக மிகச் சக்திவாய்ந்த சூறாவளி ஒன்று அமெரிக்காவில் பல பகுதிகளை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகெங்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. முறை தவறிப் பெய்யும் மழை, கடும் வெயில் உள்ளிட்டவை மக்களைப் பாதிக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் பல பகுதிகளில் அங்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
'அணு ஆயுத போர் வெடித்தால் கண்டிஷனர் வேண்டாம் ஷாம்பு பயன்படுத்துங்கள்' - அமெரிக்கா திடீர் அறிவுரை
அமெரிக்கா
இந்தச் சூழலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இப்போது மிக மோசமான புயல் தாக்குதலால் சின்னாபின்னமாகி உள்ளது. இயன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த புயல்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
241 கிமீ வேகம்
நேற்று புதன்கிழமை பகல் நேரத்தில் இயன் சூறாவளியின் அழிவை மக்கள் பார்த்தார்கள். இதை அதிக அழிவை ஏற்படுத்தும் கேட்டகிரி 4 சூறாவளியாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அப்போது அதிகபட்சம் 241 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில மணி நேரம் வரை நீடித்த இந்த சூறாவளி பாதிப்பு, அமெரிக்காவில் புளோரிடா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது.
தஞ்சம்
சமீப ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான சூறாவளி பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது. நல்வாய்ப்பாகப் புயல் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படி மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டன. இந்த சூறாவளி அடிக்க தொடங்கி 8 மணி நேரத்திலேயே இது கேட்டகிரி 1 சூறாவளி வலு இழந்தது.
தேசியப் பாதுகாப்புப் படையினர்
இருப்பினும், அதற்குள் இது ஏற்படுத்திய பாதிப்பு மிக மோசமானதாகவே இருந்துள்ளது. மீட்புப் பணிகளில் சுமார் 5000 தேசியப் பாதுகாப்புப் படையினரை அமெரிக்கா ஈடுபடுத்தி உள்ளது. இந்த சூறாவளியில் எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர் அல்லது மோசமாகக் காயமடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. வரும் நாட்களில் இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ
இதனிடையே இது தொடர்பான வீடியோக்களும் சில இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதில் சூறாவளி குறித்த செய்தி சேகரிக்க பிஎன்ஓ நியூஸ் நிறுவனத்தின் தலைவர் அங்குச் சென்று உள்ளார். அப்போது அடித்து சூறாவளிக் காற்று காரணமாக அவரால் ஒரே இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. அங்கிருந்த கம்பத்தைப் பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்டு நின்றார். அது மட்டும் இல்லையென்றால் அவர் அப்படியே பறந்து கூட சென்று இருப்பார்.
சொகுசு படகுகள்
இது மட்டுமின்றி புளோரிடா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு படகுகள் அப்படியே நகரத்திற்குள் வந்துவிட்டது. மேலும், மரங்கள் எல்லாம் கூட அடித்த சூறாவளிக் காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன. அமெரிக்கா மட்டுமின்றி க்யூபா நாட்டிலும் இந்த சூறாவளி தாக்கம் உணரப்பட்டது. அங்கும் கூட சூறாவளி பாதிப்பு மிக மோசமானதாகவே இருந்தது.