அடேங்கப்பா! ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு இத்தனை கோடி வழங்கப்படுகிறதா?
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
இடையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து சற்று விலகிய எலான் மஸ்க் மீண்டும், அந்நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்தார்.

சிஇஓ பராக் அகர்வால் பணி நீக்கம்
அதன்படி ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். ட்விட்டரை கைவசப்படுத்தியதும் தனது ட்விட்டர் பையோவில் சீப் ட்விட் என்றும் மாற்றினார். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். பராக் அகர்வாலை தவிர மேலும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்தார்.

நெட்டிசன்கள் மத்தியில்..
நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே உள்ளிட்டோரும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அடங்குவர். இது தொடர்பான பத்திரிக்கை செய்திகள் வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. எலான் மஸ்க் ட்விட்டரில் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளே சர்வதேச அளவில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

மும்பை ஐஐடியில் பயின்ற பராக்
குறிப்பாக இந்தியரான பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது இந்திய நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பராக் அகர்வால், கடந்த 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேரும் போது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது.

ரூ.346 கோடி கிடைக்கும்
அதன்பிறகு அசூர வளர்ச்சி கண்ட ட்விட்டர் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்த பராக் அகர்வால் கடந்த ஆண்டு தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வந்தார். தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டுப்பாட்டு மாற்றப்பட்ட 12 மாதத்திற்குள் பராக் அகர்வால் பணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு இந்த தொகை கிடைக்கும் என்று நிறுவனம் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈக்விட்டி பங்குகள் மற்றும் அடிப்படை ஊதியத்தின் ஆண்டு வருவாய் உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு இந்த தொகை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications