வெறும் 20 நொடிகள்! சரமாரியாக இறங்கிய கத்திகுத்து.. சத்தமில்லாமல் சரிந்த சல்மான் ருஷ்டி! என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்காவில் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மேலும் சில முக்கிய தகவல்களைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பகிர்ந்து உள்ளனர்.
Recommended Video
மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் இவர், சர்வதேச அளவில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான இவரது 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' நாவல் மிக முக்கிய விருதான புக்கர் விருதையும் பெற்று உள்ளது.
பதுங்கி வாழ்ந்தார்; பயந்து வாழவில்லை - கலகங்களை காதலித்த சல்மான் ருஷ்டியின் கதை
தி சாத்தானிக் வெர்சஸ்
1988இல் வெளியான தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. முகமது நபியை இழிவாகச் சித்தரித்து கருத்துகள் இருந்ததாகக் கூறி பல இஸ்லாமிய நாடுகள் இந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்தன. குறிப்பாக ஈரான் நாட்டில் ருஷ்டியை கொன்றால் 3 மில்லியன் டாலர் வரை வெகுமதி அளிக்கப்படும் என வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்
இந்தச் சூழலில் தான் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு, நியூயார்க்கில் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவர் ஒரு கண்ணை இழக்க வேண்டியிருக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10- 15 முறை
இந்தச் சூழலில் அவர் மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் வெறும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. இது தொடர்பாகப் பார்வையாளர் ஒருவர் கூறுகையில், "வேகமாக ஓடி வந்த அந்த மர்ம நபர் சல்மான் ருஷ்டி மீது பாய்ந்து தாக்கினார். சில நொடிகளில் 10 முதல் 15 முறை தாக்கி இருப்பார்" என்றார்.
வெறும் 20 நொடிகள்
கருப்பு நிறத்தில் உடை மற்றும் கருப்பு மாஸ்க் அணிந்து இருந்த அந்த மர்ம நபர், வேகமாக மேடைக்கு வந்துள்ளார். மேடையில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது பாய்ந்த அவர், முதலில் கைகளைக் கொண்டு குத்தியுள்ளார். பின்னர் கத்தி போன்ற ஆயுதத்தைக் கொண்டு கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இது அத்தனையும் வெறும் 20 நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது.
சரிந்த சல்மான் ருஷ்டி
அங்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்து கொண்டு, போலீஸ் அதிகாரி தாக்குதல் நடத்திய நபரைப் பிடிப்பதற்குள் சல்மான் ருஷ்டி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது உடலில் இருந்தும் அதிகப்படியான ரத்தம் வெளியேற தொடங்கியது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களில் ஒரு டாக்டர், சல்மான் ருஷ்டிக்கு முதலுதவி செய்தார். இதயத்திற்கு ரத்தம் செல்ல ஏதுவாக முதலில் கால்களைச் சற்று தூக்கிப் பிடித்தனர்.
தாக்கியவர் யார்
இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சி நடக்க இருந்த மேடை முழுக்க ரத்த வெள்ளத்தில் உள்ளது. தாக்குதல் நடத்திய நபர் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஹாதி மாதர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. இருப்பினும், அவர் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.