பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. உதவிக்கரம் நீட்டிய சவுதி அரேபியா.. 1 பில்லியன் டாலர் முதலீடு!
வாஷிங்டன்: நிதி மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் தொகை முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நிதி நிலைமையை சமாளிக்க சர்வதேச நிதியமான ஐ.எம்.ப்பிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயன்றது. ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது.
தற்காலிகமாக தப்பிய இம்ரான் கான்.. முன் ஜாமீனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்தது பாகிஸ்தான் கோர்ட்!
அடுத்த இலங்கையை போல..
இவ்வாறு உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நாடு நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், ''பாகிஸ்தான் அடுத்த இலங்கையை போல் விரைவில் மாறிவிடும் எனவும், இத்தகைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு பாகிஸ்தானின் தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம்'' என்று குற்றம்சாட்டினார்.
உலக நாடுகளிடம் உதவி
ஆனால் ஆளும் பாகிஸ்தான் அரசு சார்பில் இம்ரான் கானின் முந்தைய ஆட்சியினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டியது. இவ்வாறு மாறி மாறி குறைகூறும் நிலையில், நாட்டில் பொருளாதார நிலைமையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசி வருகிறார்.
தொலைபேசியில் பேச்சு
இந்த நிலையில் சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுடன் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் இரு தலைவர்களும் பாகிஸ்தான் - சவுதி அரேபியாவின் உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
1 பில்லியன் டாலர் முதலீடு
அப்போது சவுதி அரேபிய மன்னர் பாகிஸ்தானில் மேலும் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் உதவும் வகையில் சவுதி அரேபியா இந்த முதலீட்டை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தேவையான உதவிகள் அளிக்கப்படும்
மேலும், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் பேசும் போது, பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பேசியதாகவும், தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்றும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் கூறியதாகவும் பிலாவல் பூட்டோ கூறினார். பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்பு நாடுகளிடம் இருந்து 4 பில்லியன் டாலர் தொகை பாகிஸ்தானில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.