தப்பு பண்ணாலும் ஜெயில் கிடையாதாம்.. கைலாசா எங்கே இருக்கு? நித்தியானந்தா கொடுத்த புது அப்டேட்
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறிவருகிறார். தனது கைலாசா நாடு இருக்கும் இடத்தை குருபூர்ணிமா நாளில் அறிவிப்பதாக கூறிய நித்யானந்தா, சில கூடுதல் தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு இருப்பிடம் பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை.
பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் சாமியார் நித்தியானந்தா. பெங்களூர் அருகே இருக்கும் பிடதியில் ஆசிரமம் தொடங்கிய நித்தியானந்தாவை எப்போதுமே சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நித்தியானந்தா சிக்கினார். தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார்.

அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, தனது கைலாசா நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்களை நித்தியானந்தா தரப்பு வெளியிட்டது. அதுபோக கைலாசா நாட்டின் பெருமைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நித்தியானந்தா ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.
ஆனால், கைலாசா எங்கே இருக்கிறது என்று இதுவரை அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தான், கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா கூறியிருக்கிறார். குருபூர்ணிமா அன்று கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா அறிவித்து இருந்தார். இதனால், கைலாசா எங்கு இருக்கிறது என்பதை அறிய நெட்டிசன்கள் ஒருபக்கம் ஆர்வம் காட்டினர்.
மறுபக்கம் போலீசாரும் கவனித்துக் கொண்டு இருக்க, தற்போது தனது கைலாசா பற்றி கூடுதலாக சில தகவல்களை சொல்லியிருக்கிறார் நித்தியானந்தா. யுனிடைட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்பது உண்மை என சொல்லும் நித்தியானந்தா, கைலாசாவில் கோடீஸ்வரர் ஆக இருந்தாலும் வீடற்றவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமம் என சொல்லியிருக்கிறார்.
வாட்டிகன் எப்படி கத்தோலிக்க தலைநகராக உள்ளதோ அது போல இந்து தர்மத்தால் உலகை வளப்படுத்தும் தலைமையகம்தான் கைலாசா என சொல்கிறார் நித்தியானந்தா. ராணுவம் இல்லை, காவலர்கள் இல்லை.. வரி இல்லை.. வேத ஆகமங்களே அரசியல் அமைப்பு. யாராவது தவறு செய்துவிட்டால் ஜெயில் கிடையாது. பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் பிராயச்சித்தம் என்றும் முழுக்க முழுக்க நிதி உதவியில்தான் இயங்குவதாவும், அனைவருக்கும் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன் தீவு, பசிபிக், தென் அமெரிக்கா ஆகிய ஏழு இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இறையாண்மை பிரதேசங்களும், சுயாட்சி பிரதேசங்களும் உண்டு எனக் கூறியுள்ள நித்யானந்தா, இனி வரும் காலத்தில் வேறு சில இடங்களையும் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications