பெண் ஊழியர்களுக்கு நியூயார்க் கவர்னர் பாலியல் தொல்லை.. குற்றச்சாட்டுகள் உறுதி.. பதவி விலக கோரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னராக இருப்பவர் ஆண்ட்ரூ குவாமோ. ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் பெண்களை துன்புறுத்தியதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாக பல்வேறு பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
இந்த புகார்கள் தொடர்பாக கவர்னர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் உள்பட 179 பெண்களிடம் அதிகாரிகள் முதல் கட்டமாக தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

வழக்கறிஞர் குழு
இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஒரு வழக்கறிஞர் குழுவை நியூயார்க் மாகாண அரசு தலைமை வழக்கறிஞர் லெட்டிடியா ஜேம்ஸ் அமைத்தார். இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வழக்கறிஞர் குழுவுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கறிஞர் குழு கடந்த 5 மாதங்களாக பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தியது.

விசாரணை அறிக்கை
இந்த குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று வெளியிட்டது. நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பல பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உண்மைதான் என தெரியவந்துள்ளது. கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ தனது அலுவலக முன்னாள் மற்றும் தற்போதையை பெண் ஊழியர்களை விரும்பத்தகாத வகையில் தொடுதல், தகாத கருத்துக்களை தெரிவித்தல் உள்ளிட்ட தொல்லைகளை கொடுத்துள்ளார்.

குற்றம் உறுதி
''கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கூட்டாட்சி மற்றும் மாநில சட்டத்தை அவர் மீறியுள்ளார்'' என்றும் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்தார். இந்த விசாரணையின் போது 74 ஆயிரத்திற்கும் அதிகமான ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் லெட்டிடியா ஜேம்ஸ் கூறியுள்ளார்.

ஜோ பைடன் சொல்வது என்ன?
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ தான் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி இருக்கிறார். இதேபோல் நியூயார்க் ஜனநாயகக் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆண்ட்ரூ குவாமோ பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளனர். கொரோனா ஆரம்ப காலத்தில் நியூயார்க்கில் கொரோனா நெருக்கடியைக் சிறப்பாக கையாண்டதற்காக நாடு முழுவதும் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications