கொரோனா 2-வது அலை: இந்தியாவுக்கு 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவி செய்த அமெரிக்கா.. இந்தியா நன்றி!
வாஷிங்டன்: கொரோனா 2-வது அலையில் இந்தியாவுக்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவுக்கு நிவராண உதவிகள் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் கொடூரமாக இருந்தது.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு, அதிக உயிரிழப்பு என்று நமது நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
உதவிய உலக நாடுகள்
கொரோனா 2-வது அலையை சமாளிக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டின. கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பல்வேறு பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தன.
500 மில்லியன் டாலர் உதவிகள்
இந்த நிலையில் இந்தியாவுக்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவுக்கு நிவராண உதவிகள் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறிய தென் மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் செயல் உதவி செயலாளர் டீன் தாம்சன், 'அமெரிக்க அரசு, மாகாண அரசுகள், அமெரிக்க நிறுவனங்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் நெருக்கடியை சமாளிக்க உதவி செய்தன.
உதவி செய்கிறோம்
எங்களின் முக்கியமான தடுப்பூசி உற்பத்தி பொருட்கள் ஆர்டர் ஒன்றை நாங்கள் இந்தியாவுக்கு திருப்பி விட்டோம். இது 20 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் அளவிலான அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை இந்தியா உற்பத்தி செய்ய வழிவகுக்கும். கடந்த மாதம் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடிக்கு உறுதியளித்தபடி நாங்கள் இந்தியாவுக்கு கணிசமாக உதவி வருகிறோம்' என்று டீன் தாம்சன் தெரிவித்தார்.
இந்தியா நன்றி
இந்த நிலையில் 5 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் வெளிறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசியபோது, இந்த கடினமான காலத்தில் இந்தியாவுக்கு உதவி செய்த அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா தொடக்க காலத்தில் இந்தியா செய்த உதவிக்கு அமெரிக்காவும் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.