புதிய தலைவலி..! 18 ஆண்டுகளில் முதல்முறை.. காற்றில் பரவும் குரங்கு அம்மை.. அமெரிக்காவில் தொற்று உறுதி
வாஷிங்டன்: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவருக்கு அரிய வகை குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். உலகில் எந்தவொரு நாட்டினாலும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளால் கூட கொரோனா பாதிப்பில் இருந்த தப்ப முடியவில்லை. சொல்லப்போனால் உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா தான் அதிக மக்களை இழந்துள்ளது.
சூப்பர் செய்தி..! வலுவாகும் இந்திய கடற்படை... அமெரிக்காவின் நவீன ஹெலிகாப்டர்கள் கடற்படையில் இணைப்பு
குரங்கு அம்மை
இந்நிலையில், புதிய தலைவலியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவருக்கு அரிய வகை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன் தான் நைஜீரியா நாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவர் தற்போது டல்லாஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
எங்கிருந்து வந்தவர்
இதையடுத்து அந்த நபர் வந்த விமானத்தில் பயணித்த நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணிகளில் அமெரிக்கத் தொற்று நோய் கட்டுப்பாடு அமைப்பு ஈடுபட்டுள்ளது. அவர் இரண்டு விமானங்களில் பயணித்துள்ளார். முதலில் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு கடந்த ஜூலை 8 ஆம் தேதி பயணித்துள்ளார். அதன்பிறகு ஜூலை 8 ஆம் தேதி அட்லாண்டாவில் இருந்து டல்லாஸுக்கு பயணித்துள்ளார். உடன் பயணித்தவர்கள் குறித்த தரவுகளைத் தொற்று நோய் கட்டுப்பாடு அமைப்பு சேகரித்து வருகிறது.
2003க்கு பிறகு முதல்முறை
இருப்பினும், இதுவரை இந்த ஒருவருக்கு மட்டுமே குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாகக் கடந்த 2003ஆம் ஆண்டு 47 பேருக்குக் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அமெரிக்காவின் மேற்கு மாகாணத்தில் நாய்கள் மூலம் இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
அரிய நோய்
குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான அதேநேரம் தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். எலிகள் மத்தியில் தான் இந்த வைரஸ் உயிர் வாழும். ஆனால், சில சமயங்களில் இது மனிதர்களுக்கும்கூட பரவும் ஆபத்து உள்ளது. இது குரங்கு அம்மை வைரஸும் பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்தது தான்.
எப்படி பரவும்
பெரும்பாலான மற்ற வைரஸ்களை போலவை இந்த வைரசும் முக்கியமாகச் சுவாச துகள்கள் மூலமே பரவுகிறது. அந்த சுவாச துகள்கள் கண்கள், வாய், மூக்கின் வழியே உடலில் நுழைய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதேபோல ஒரு நபரின் உடலில் காயங்கள் ஏதேனும் இருந்தால், அதன் மூலம் கூட குரங்கு அம்மை பரவும் அபாயம் உள்ளது. அதேபோல துணிகள் மூலமும் வைரஸ் ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் அபாயம் உள்ளது.
அச்சம் வேண்டாம்
இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் அபாயம் இருந்தாலும்கூட தற்போது கொரோனா பரவல் காரணமாக விமானங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்கு அம்மை அந்த நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு புதிய தலைவலியாக இந்த குரங்கு அம்மை உருவெடுத்துள்ளது.