"ஒரு இறைச்சி துண்டு + கொஞ்சம் கேரட்".. டிரம்பை நம்பி ஈரான் கடலுக்கு போன அமெரிக்க வீரர்கள் பரிதாபம்
வாஷிங்டன்: உலகிலேயே பெரும் வல்லரசு நாடு என்றும், பாதுகாப்பு படைகளுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாகவும் அமெரிக்கா உள்ளது. ஆனால் டிரம்பை நம்பி ஈரானுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் சண்டையிட்டு வரும் அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் தற்போது பசியில் வாடி வதங்கி வருகின்றனர். போர்க்கப்பல்களில் உள்ள அமெரிக்காவின் கடற்படை வீரர்களின் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு வீரருக்கு ஒரு இறைச்சி துண்டு, கொஞ்சமாக வேகவைத்த கேரட் உள்ளிட்டவை மட்டுமே வழங்கப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஈரான் மூடி வைத்திருந்த ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்து வந்தது. தற்போது அனைத்து நாடுகளின் கப்பல்களும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி கொடுத்துள்ளது.

ஈரானின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு இஸ்ரேல் - லெபனான் இடையேயான 10 நாள் போர் நிறுத்தம் தான் காரணம். ஈரானுக்கு ஆதரவாக லெபனான், இஸ்ரேலை தாக்கியது. இதனால் இருநாடுகள் இடையே மோதல் நீடித்து வந்தது. டிரம்ப் தலையிட்டு இருநாடுகளுக்கு இடையேயான மோதலை 10 நாள் நிறுத்தினார். இதையடுத்து தான் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துள்ளது.
2 போர்க்கப்பல்கள்
இருப்பினும் கூட மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் அருகே அமெரிக்கா தனது யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் ட்ரிபோலி என்ற 2 ராட்சச போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்பது விமானம் தாங்கி போர்க்கப்பலாகும்.
யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் என்பது ராணுவம், கடற்படை, விமானப்படை என்று முப்படைகளையும் ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும். இந்த போர்க்கப்பல் விமானம் தாங்கி கப்பலாக விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுமந்து செல்வதோடு, நிலத்தில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு தேவையான டாங்கி வாகனங்கள் உள்பட பிற ராணுவ தளவாடங்களை இந்த கப்பல் வழியாக கடற்கரைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த 2 போர்க்கப்பல்களிலும் கடற்படை, விமானப்படை, ராணுவ வீரர்கள் உள்ளனர்.
ஒரு ரொட்டி - வேகவைத்த கேரட்
இந்த 2 போர்க்கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க போர்க்கப்பல்களில் கடுமையாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் இதுதொடர்பாக தங்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு உணவு தட்டுப்பாடு தொடர்பான போட்டோக்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துள்ளனர். அதன்படி 3,500 கடற்படை வீரர்களுடன் சென்றுள்ள யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பலில் வீரர் ஒருவருக்கு ஒரு டார்ட்டில்லா (ஒருவகையான ரொட்டி) மற்றும் வேகவைத்த கேரட் மட்டுமே வழங்கப்படுகிறது.
சிரமப்படும் பெண் வீராங்கனை
இதுபற்றி யுஎஸ்எஸ் திரிபோலி கப்பலில் பணியாற்றும் வீராங்கனையின் தந்தையும், முன்னாள் கடற்படை வீரருமான டான் கூறுகையில், ''யுஎஸ்எஸ் திரிபோலி கப்பலில் உள்ள வீரர்களின் நிலைமை மோசமாக உள்ளது. தேவையான அளவுக்கு உணவு பொருட்கள் இல்லை. இருக்கும் உணவு பொருட்களை வீரர்கள் பங்கிட்டு உண்ணும் நிலை உள்ளது. காபி இயந்திரம் பழுதாகி உள்ளதோடு, சுகாதார பொருட்களும் தீர்ந்து விடும் நிலையில் உள்ளதாம்.
ஒரு மாதத்துக்கு முன்பாகவே என் மகளுக்கு ஷாம்பு, பேஸ்ட், வாசனை திரவியம், சாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை அனுப்பினேன். ஆனால் இப்போது வரை அது என் மகளிடம் சென்று சேரவில்லை. உலகிலேயே வலிமையான படை எங்களுடையது தான். இங்கு உணவுப் பற்றாக்குறை இருக்கக்கூடாது. '' என்று கவலை தெரிவித்துள்ளார்
அதேபோல் டெக்சாஸை சேர்ந்த மாலுமி ஒருவருக்கு அவரது குடும்பத்தினர் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள உணவு உள்பட பிற தேவையான பொருட்களை அவருக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் அதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. தற்போது ஈரானின் போஸ்டல் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க படை வீரர்களின் குடும்பங்கள் கூட வீரர்களுக்கு தேவையான உணவு பொட்டலங்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளது.
ஒரேயொரு இறைச்சி துண்டு
யுஎஸ்எஸ் திரிபோல் போர்க்கப்பலில் நிலைமை இப்படி இருக்க.. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் வீரர்களும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். அங்கு வீரர் ஒருவருக்கு வேகவைத்த சில கேரட் துண்டுகள், பதப்படுத்தப்பட்ட ஒரு துண்டு இறைச்சி மட்டுமே உணவாக வழங்கப்படுகிறதாம். அதுவும் தரமின்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பல வீரர்கள் தங்களின் குடும்பத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
உணவு சுவையற்றதாக உள்ளது. போதிய அளவு கிடைக்கவில்லை. எப்போதுமே பசியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஈரான் அருகே அமெரிக்காவின் 2 போர்க்கப்பலில் பணியாற்றி வரும் கடற்படை வீரர், வீராங்கணைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரச்சனை முதல் முறையல்ல
அமெரிக்காவின் போர்க்கப்பல்களில் வீரர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இப்படி நடந்துள்ளது. சமீபத்தில் கூட ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் போர்க்கப்பலில் சலவை அறையில் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 100 படுக்கைகள் எரிந்ததோடு, வீரர்களும் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த 4,500 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு அந்த கப்பல் பராமரிப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு தான் இந்த 2 கப்பல்களும் ஈரானை நோக்கி டிரம்ப் அனுப்பி வைத்த நிலையில் தற்போது அங்கு உணவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் கடற்படை, விமானப்படை, ராணுவ வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications