"நெருங்கிய பேரழிவு.." இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத போர்? மைக் பாம்பியோ பகீர்
2019இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத போர் ஏற்பட்டிருக்கும் என்று அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் சுமுகமான உறவு இருந்தது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் டிரம்பின் அரசில் முக்கிய நபராக வலம் வந்தவருமான மைக் பாம்பியோ சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் முதலே நல்ல ஒரு உறவு இருந்தது இல்லை. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதலான ஒரு போக்கே நிலவி வந்தது. இந்தியா எல்லைகளில் பாகிஸ்தான் அத்துமீறும் சம்பவங்களும் நடந்துள்ளன.
பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னர் இப்போது தான் எல்லையில் அத்துமீறி நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சற்று குறைந்துள்ளது. அதேநேரம் டிரோன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அத்துமீறி ஆயுதங்கள் எடுத்து வருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
குவாட் அமைப்பில் இந்தியா சேரவே இதுதான் காரணம்.. நடந்தது என்ன? "சீக்ரெட்டை" சொன்ன அமெரிக்க புள்ளி!
மைக் பாம்பியோ
இதனால் இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் இன்னுமே கூட 100% அமைதியான நிலை திரும்பவில்லை. இந்தச் சூழலில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் டிரம்பின் அரசில் முக்கிய நபராக வலம் வந்தவருமான மைக் பாம்பியோ இந்தியா பாகிஸ்தான் குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர், அமைச்சர் போன்ற உயர் பதவிகளில் இருப்போர் எப்போதும் பதவியில் இருந்து விலகிய பின்னர் புத்தகங்களை எழுதுவார்கள். தங்கள் பணிக் காலத்தில் நடந்த சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்திருப்பார்கள்.
இந்தியா பாகிஸ்தான் உறவு
அப்படிதான் முன்னாள் வெளியுறவு அமைச்சரான மைக் பாம்பியோ 'நெவர் கிவ் என் இன்ச், ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்கா ஐ லவ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருக்கும் உறவு குறித்து விளக்கியுள்ள அவர், கடந்த 2019இல் இரு நாடுகளும் அணு ஆயுதப் போரை நெருங்கிவிட்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவரே இப்படிக் கூறியது, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இது தொடர்பாக அமெரிக்க அரசு விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
ஆணு ஆயுத போர்
மைக் பாம்பியோ தனது புதிய புத்தகத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன்னிடம் கூறியதாக மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்குப் பதிலடி கொடுப்பது தொடர்பாக இந்தியாவும் சிந்தித்து வருவதாக சுஷ்மா ஸ்வராஜ் தன்னிடம் கூறியதாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 பிப். மாதம் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே உச்சி மாநாடு நடந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே அப்போது நிலவிய பதற்றமான சூழல் குறித்து உலக நாடுகள் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய அணு ஆயுத போர் நடக்கவிருந்ததாக அமெரிக்காவில் டாப் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒருவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. இதனிடையே முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் புத்தகம் குறித்து அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸிடம் கேட்ட போது, "அவர் கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. இங்கு அனைவருக்கும் தங்கள் கருத்தைக் கூற உரிமை உண்டு" என்று கூறியுள்ளார்.
இந்தியா
அதாவது அவரது கருத்து அமெரிக்காவின் கருத்து இல்லை என்றும் அது தனிப்பட்ட நபரின் கருத்து என்றும் சொல்லியுள்ளார். மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் இந்தியா சீனா உறவு குறித்தும் விளக்கியுள்ளார். சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி நான்கு நாடுகளைக் கொண்டு குவாட் குழுவில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்வான் மோதல், சீன ஆப்ஸ் மீதான இந்தியாவின் தடை, எல்லையில் இரு நாட்டு வீரர்களும் ராணுவத்தைக் குவித்தது என்று அனைத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தியாவின் கொள்கை
இந்தியா எந்தவொரு அணியுடனும் நெருங்கிய கூட்டணி இல்லாமல் சொந்த போக்கை கடைப்பிடித்து வந்தது. ஆனால், சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இந்தியா இதை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை இணைத்து குவாட் அமைப்பு ஒன்றை உருவாக்கப் பலரும் முயன்ற நிலையில், சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளும் டிரம்ப் அரசின் முயற்சியும் இந்த குவாட் முறையைச் சாத்தியமாக்கியதாக அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கல்வான் மோதல்
இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவை கல்வான் மோதல் மேலும் மோசமாக்கியது. கல்வான் மோதலுக்குப் பிறகு, சீனாவுடனான தனது உறவை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தத் தொடங்கினர். அதன் பின்னரே இந்தியா சீனாவின் செயலிகளைத் தடை செய்தது என்றும் பாம்பியோ தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.