பதவி காலம் முடிய சில நாட்கள்தானே இருக்கு.. ஆனாலும், டிரம்ப்பை பதவி நீக்க ஏன் அவசரம்? விஷயம் இதுதான்
வாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் ஏன் அவசியப்படுகிறது? பதவி நீக்க நடைமுறை எப்படி இருக்கும்? என்ற கேள்வி உலகம் முழுக்க உள்ள மக்கள் மனதில் நிழலாடுகிறது.
இதோ ஏன், எப்படி என்ற தகவலை இப்போது பார்க்கலாம்.
நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு... டிரம்ப், மைக் பென்ஸ் முதன்முறை சந்திப்பு.. என்ன திட்டம்?
சபாநாயகர் கடிதம்
ஜனவரி 20ம் தேதி, புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அவசரம் காட்டப்படுகிரது.
டிரம்பை பதவி நீக்கம் செய்யும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி சக எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டத் திருத்தம்
முதற்கட்டமாக டிரம்பின் அதிபர் அதிகாரங்களை பறிக்கும் 25வது திருத்தத்தை செயல்படுத்த துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். இந்த தீர்மானம் வெற்றி பெறாத பட்சத்தில் போராட்டத்தை தூண்டும் குற்றச்சாட்டில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவோம் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அச்சுறுத்தல்
நமது அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் விரைவாக செயல்பட்டாக வேண்டும். ஏனெனில் அதிபர் டிரம்ப் இந்த இரண்டுக்கும் உடனடி அச்சுறுத்தலாக உள்ளார் என்றும், நமது ஜனநாயகத்தின் மீது அதிபரால் நடத்தப்படும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. எனவே உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார், பெலோசி.
இம்பீச்மென்ட் தீர்மானம்
அமெரிக்க அதிபராக இருப்பவரை அவரது பதவிக்காலம் முடிவடையும் முன்பாக பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கு "இம்பீச்மெண்ட்" பயன்படுத்தப்படுகிறது. தேசத்துரோகம், லஞ்சம் மற்றும் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விசாரணை குழு அமைப்பு
இதையடுத்து பிரதிநிதிகள் சபையின் சார்பில் ஒரு நீதி விசாரணை குழு அமைக்கப்படும். இந்த நீதி விசாரணைக் குழு விசாரணை நடத்தும் போது குற்றச்சாட்டு மீது உரிய அளவுக்கு ஆதாரங்கள் இருந்தால் பின்னர் அது ஓட்டெடுப்புக்கு விடப்படும். பெரும்பான்மையை விடவும் குறைவான ஓட்டுகள் கிடைத்தால் இந்த நடவடிக்கை கைவிடப்படும். பெரும்பான்மை ஓட்டுக்கள், அதிபருக்கு எதிராக கிடைத்தால் செனட் சபை அதிபருக்கு எதிராக விசாரணையை நடத்தும்.
செனட் உறுப்பினர்கள் ஓட்டு
மூன்றில் இரண்டு பங்கு செனட் உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக ஓட்டு போட்டால், அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். துணை அதிபர் அதிபராக பொறுப்பேற்றார். ஒருவேளை மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக ஓட்டு போட்டால், அதிபர் பதவியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் நீக்கம், ஏன் அவசியம்?
ட்ரம்பின் பதவிக்காலம் முடிய இன்னும் சில நாட்களே இருந்தபோதிலும், ஏன் அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடக்கிறது தெரியுமா? அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் அவர் மீண்டும் எந்த ஒரு அரசு சார்ந்த பதவியிலும் அமர முடியாது. அதாவது, 2024ம் ஆண்டு, மீண்டும் டிரம்ப்பால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் மீண்டும் அதிபரானால் அமெரிக்கா கதை கந்தல்தான் என்ற பயத்தில்தான், இந்த நடவடிக்கை துரித கதியில் எடுக்கப்படுகிறதாம்.