தமிழகத்திற்கு வர போகும் மெகா முதலீடு? டெஸ்லா லிஸ்டில் உள்ள 4 மாநிலங்கள்.. டிக் அடிப்பாரா எலான் மஸ்க்
டெல்லி: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ள நிலையில், அது தொடர்பாக மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியா தொடர்ச்சியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே மின்சார கார்கள் துறையில் டாப் இடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனம் இப்போது இந்தியாவுக்குள் தனது சந்தையை விரிவுபடுத்த உள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை இப்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 பில்லியன் டாலரை முதலீடு செய்ய டெஸ்லா தயாராக உள்ளது.
இந்தியா: உற்பத்தி ஆலை, மற்றும் பேட்டரி எக்கோ சிஸ்டம், இது சார்ந்த துணைத் தொழில்கள் எனப் பல புதிய தொழில்கள் இதன் மூலம் உருவாகும். முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு சப்ளை செய்ய ஏதுவாக இந்தியாவில் $3 பில்லியன் முதலீட்டில் ஆலை ஒன்று கட்டப்படும். இந்த ஆலையில் சிறிய ரக கார்கள் உற்பத்தி செய்யப்படும். இது தவிர $15 பில்லியன் டாலரில் விரிவான ஒரு எக்கோ சிஸ்டத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இவை நடக்க உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் தான் புதிய மின்சார வாகன கொள்கையை வெளியிட்டு இருந்தது. இது டெஸ்லாவின் கோரிக்கைகளான வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி விகிதத்தை மாற்றுவது உள்ளிட்ட டெஸ்லாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இருந்தது. அதன் பிறகே இப்போது டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்கிறது.
தொழிற்சாலை: அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்லா இந்தியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் முதலீடு செய்து, முதல் சிறிய காரை வெளியிடலாம். இந்த டெஸ்லா காரின் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இருப்பினும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது விலை குறைந்த மாடலாக இருக்கும். இந்த விவகாரத்தில் டெஸ்லா இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மின்சார கார்கள் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கும். எந்தவொரு துறையிலும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டும் என ஊக்கத்தொகை வழங்கப்படாது" என்றார். இதன் மூலம் டெஸ்லா மட்டுமின்றி பல வெளிநாட்டுக்கு மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இறக்குமதியில் சலுகை இருக்கும் என்பது தெரிகிறது.
இந்தியாவின் இலக்கு: வரும் 2030ஆம் ஆண்டிற்குள் புதிதாகப் பதிவாகும் 30% தனிநபர் கார்கள், 40% பேருந்துகள், 70% வணிக கார்கள் மற்றும் 80% இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3-சக்கர வாகனங்கள் மின்சார கார்களாக இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இதற்காகவே மத்திய அரசு ஊக்கத் தொகை, சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
4 மாநிலங்கள்: மற்ற அமெரிக்க நிறுவனங்களைப் போலவே, டெஸ்லாவும் சீனாவுக்கு வெளியே தங்கள் உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் டெஸ்லா நிறுவனம் மொத்தம் 4 மாநிலங்களை ஷார்ட் லிஸ் செய்து வைத்துள்ளதாம். ஹரியானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் லிஸ்டில் உள்ளன.
இந்திய மார்க்கெட் முக்கியம் என்றாலும் கூட மற்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளது. எனவே, துறைமுகத்திற்கு அருகே இருக்கும் பகுதியை டெஸ்லா தேர்வு செய்யவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications