மாரி செல்வராஜ் படங்களின் லுங்கி அரசியல்! "பைசன்" துருவ் விக்ரம் போஸ்டர் பார்த்தீர்களா?
சென்னை: தீபாவளிக்கு வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படத்தின் (bison movie) ஒரு புகைப்படம், ஏன் பேசுபொருளாகியுள்ளது தெரியுமா?
துருவ் அணிந்திருக்கும் அதே நீல-வெள்ளை லுங்கியைத் தான், தனுஷ் 'கர்ணன்' படத்திலும், கலையரசன் 'வாழை' படத்திலும் அணிந்திருந்தனர்! இது ஒரு சினிமா 'யூனிவர்ஸ்' இல்லை; மாறாக, இது மாரி செல்வராஜின் ஆழமான அரசியல் அடையாளம்!

வேட்டிக்கு எதிராக லுங்கி, ஒரு வரலாற்றுப் போராட்டம்!
மாரி செல்வராஜ் தனது படங்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பேசுகிறார். அவர் லுங்கியை ஒரு சின்னமாகக் கையாள்வதன் காரணமும் இதுதான்.
- வெள்ளை வேட்டி: தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில், இது நில உடைமையாளர்கள் மற்றும் உயர் சாதியினரின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. பட்டு ஜரிகை இதற்கு மேலும் வலு சேர்த்தது.
- லுங்கி (சாரம், அல்லது கைலி): இது பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உடையாக இருந்தது. விலை குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
மாரி செல்வராஜ், வேட்டிக்கு எதிராக லுங்கியை நிறுத்துகிறார். தன் சமூகத்தின் அடையாளத்தை பெருமையுடன் நிலை நிறுத்தும் மனப்பான்மையை இது காட்டுகிறது. மேலும் இதை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நிஜமான வாழ்க்கையில் பயணிப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
'கர்ணன்' படத்தில் தனுஷ், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கோபத்தைக் காட்டும்போது இந்த லுங்கியை அணிந்திருப்பார். இது வெறுமனே துணி அல்ல; தங்கள் அடையாளத்தின் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதம் என்றே மாரி செல்வராஜ் நிலை நிறுத்த முற்படுகிறார்.
'பைசன்' படத்தில் துருவ் விக்ரம் இந்த லுங்கியை அணிவது, அவரது கபடி வீரர் கதாபாத்திரமும் சமூகப் போராட்டத்தின் ஒரு பகுதியைச் சுமக்கிறது என்பதையே குறியீடாக உணர்த்துகிறது.
எஜமான் VS காலா படங்கள்
ஒரே ரஜினிதான். ஆனால் எஜமான் படத்தில் பட்டு வேட்டி அணிந்த ஆதிக்க சாதி நபராக வரும் ரஜினி, பா.ரஞ்சித்தின் காலா படத்தில் கறுப்பு வேட்டி கட்டியிருப்பார். லுங்கி்க்கு ஈடானதுதான் இது. இதன் மூலம், ரஞ்சித்தும் சரி, மாரிசெல்வராஜும் சரி தங்கள் குறியீடுகளை படத்தின் வாயிலாக கடத்தி வருவது என்னவோ உறுதியாக தெரிகிறது.

ஓவர் டோஸ்
அதேநேரம், இவ்விரு இயக்குநர்களும் குறியீடுகளை ஓவர் டோஸாக செய்து படத்தை ரொம்பவே சீரியசாக்கிவிடுகிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுகின்றன. சமீபத்தில் வெற்றிமாறன் பாத்திரப் படைப்புகளை, இதே மாதிரி இறுக்கமான காட்சிகளுக்காக இயக்குநர் ராஜகுமாரனும் விமர்சித்திருந்தார். குறியீட்டை காட்ட வேண்டும், முடிந்த அளவுக்கு பிரச்சார தொனி இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மாரி செல்வராஜும், ரஞ்சித்தும் ஓவர் டோஸ் செய்து தங்களது வழக்கமான பாணியை இழந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வருகிறது.
குறிப்பாக, "பரியேறும் பெருமாள்" போல "வாழை" இல்லை, "சார்பட்டா பரம்பரை" போல "தங்கலான்" இல்லை என்ற ஒப்பீடுகள் முன்வைக்கப்படுவதற்கு, ஓவர் டோஸாக போவதும் ஒரு காரணம் என்கிறார்கள். எது எப்படியோ, படைப்பாளிக்கு தனது கருத்தை படைப்பாக முன்வைக்க முழு உரிமை உள்ளது, ஏற்பதும் ஏற்காததும், பார்வையாளர்கள் கைகளில், என்பது மட்டும் உண்மை.












Click it and Unblock the Notifications