ரஜினி அரசியலுக்கு வருவாரா? - கருணாநிதி வீட்டில் நடந்த விவாதம்.. வைரமுத்து சொன்ன தகவல்!
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற விவாதம் கருணாநிதியின் வீட்டில் நடந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
கருணாநிதி தலைமையில் நடந்த வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழாவில், வைரமுத்து தன் ஏற்புரையில் இதனைக் குறிப்பிட்டார்.

வைரமுத்துவின் பேச்சு:
‘‘கலைஞர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவருடைய புகழை எங்களுக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். பெரியார், அண்ணா, ராஜாஜி, இந்திரா காந்தி ஆகியோரோடு உரையாடிய கலைஞர், இங்கே வலப்பக்கம் கமலுடனும், இடப்பக்கம் என்னுடனும் பேசிக்கொண்டு இருக்கிறார். உங்கள் கருணை, எங்கள் பெருமை. உலகத்திலேயே தன்னுடைய சுயசரிதையை 4,168 பக்கங்களில் ஆறு பாகங்களாகப் புத்தகப்பதிவு செய்த ஒரே தலைவர் கலைஞர்தான். அவர்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவர் படைத்த தமிழ்மீது ஒரு விமர்சனம்கூட கிடையாது. ‘உனக்கு எதிரி இல்லையா? உருவாக்கிக்கொள்' என்றான், மாசே துங். கலைஞரை இத்தனை ஆண்டுகளாக உயிரோடு வைத்து இருப்பது அவருடைய அரசியல் எதிரிகள்தான்.

கமலுடன் பழகும் நட்பு, நெருக்கம் இனிமையானது. கமல் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருமுறை கலைஞர் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தோம். ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?' என்ற விவாதம் அது. ‘எனக்குத் தெரியாது' என்றேன். ஏனென்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். ‘ஏனென்றால் அது ரஜினிக்கே தெரியாது' என்றேன். சிரித்துவிட்டனர்.
அடுத்த கேள்வி, ‘கமல் அரசியலுக்கு வருவாரா?' என்றார் துரைமுருகன். அதற்கு, ‘நிச்சயம் வரமாட்டார்' என்றேன். ‘எனக்குக் கொஞ்சம் நடிக்கத் தெரியும். அந்தளவுக்கு என்னால் நடிக்க முடியாது' என்று கமல் சொன்னதைச் சொன்னேன். கலைஞர் குபீரென்று சிரித்துவிட்டார். கலைஞர், முதலில் ரசிகர். அப்புறம்தான் தலைவர்" என்றார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications