நீர், எண்ணெய், இனிப்புக்கும் பூஜை ஏன்?
அதிகாலையில் எண்ணெய் குளியலுடன் தான் தீபாவளியை எதிர் கொள்கிறோம்.
எதற்கு இந்த எண்ணெய்க் குளியல்?
தீபாவளி பண்டிகை துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) கிருஷ்ணபட்சத்தில் (பவுர்ணமிக்கு பின் அமாவாசை வரையிலான 15 தினங்கள் கிருஷ்ண பட்சம் என்றுஅழைக்கப்படும்) பிரதோஷ தினத்தில் வரும்.
எண்ணெய் ஸ்நானம் செய்யும் முன் எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர்,புதிய உடைகள், இனிப்பு பண்டங்கள், இனிப்பு மருந்து (இது தீபாவளிமருத்து என்றும் அழைக்கப்படும்.) தீபம், நெருப்புப் பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அரப்புத் தூளில் சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள். சந்தனத்தில் பூமா தேவி வாசம் செய்கிறாள். குங்குமத்தில்கவுரி தேவி வாசம் செய்கிறாள்.(தீபாவளி திருநாளன்று சிலர் கவுரி பூஜை செய்யவதும் உண்டு). தண்ணீரில் கங்கை வாசம் செய்கிறாள். புது உடைகளில் மகாவிஷ்ணுவாசம் செய்கிறார்.
இனிப்பு மருந்தில் தன்வந்திரி வாசம் செய்கிறார். தீபத்தில் பரமாத்மா வாசம் செய்கிறார். நெருப்பு பொறியில் ஜீவாத்மா வாசம் செய்கிறார். நாம் இவற்றைபூஜிக்கும் போது இவர்கள் அனைவரும் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.
எண்ணெய், அரப்புத்தூள் ஆகியவற்றை பூஜித்த பின் தான் நாம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போதுதான் அவற்றில் வாசம் செய்யும் தெய்வங்களின் ஆசிநமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வழி முறை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட தினம்தான் தீபாவளியாககொண்டாடப்படுகிறது. தீமை அழிக்கப்பட்ட நாளன்று நாமும் நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை விட்டுவிட்டு பூஜை செய்த நீரில் குளிக்கும் போது அதில்வாசம் செய்யும் கங்கையால் நாம் செய்த பாவங்கள் நீங்குகிறது.
இந்த பூஜை தவிர சிரஞ்ஜீவிகளான ( இறப்பே இல்லாதவர்களுக்கு சிரஞ்ஜீவிகள் என்று பெயர்) அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், கிருபர், பரசுராமர்,அனுமன், விபீஷணர் ஆகியோரை பிரார்த்தித்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.
இதுபோல் தீபாவளி பண்டிகையின் போது பூஜை செய்து வழிபடுவது வாழ்வில் இருள் நீங்கி ஒளி வீச வழி வகுக்கிறது. இதனால் இந்த பண்டிகைக்கு தீபஒளிபண்டிகை என்று பெயர்.