ஆலயம் தொழுவது...
திருக்கோவிலை வலம் வருவோமா?
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடடையான் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் திருவேங்கடடையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன்நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. பெருமாள் சன்னதியின் வலதுபுறத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளன.
பெருமாள் கருவறை அமைந்துள்ள சேனை முதலியார் மண்டபத்தில் வட கிழக்கு மூலையில் சேனை முதலியார்அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். சேனை முதலியார் மண்டபத்தையடுத்து தேசிகர் என்னும் நம்மாழ்வார்சன்னதி, ராமர் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.
மகா மண்டபத்தில் பள்ளியறை, யாகசாலை ஆகியவையும் உள்ளன.வெளித் திருச்சுற்றில் உள்ள ஏகாதசி மண்டபம்அழகிய மர வேலைப்பாட்டுடன் மிக உயர்ந்த விதானத்துடன், கலைச் செறிவுள்ள தூண்களைக் கொண்டபிரமாண்டமான ஓவியக் கலைக் கூடமாகத் திகழ்கிறது.
ஏகாதசி மண்டபத்தையடுத்து ஆலயத்தின் மேல் தளத்தில் மூலைக்கருடன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் உள்ளகருடபகவான் கொஞ்சம் விசேஷமானவர். வேண்டியவர்க்கு வேண்டுபவற்றை வேண்டியவாறு தருவதுதான்இவரது ஸ்பெஷாலிட்டி.
விழாக்கள் .. வழிபாடுகள்
அரியக்குடி திருவேங்கடடையான் திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகாலப் பூஜைகள் நடக்கின்றன. சிறப்புவழிபாடாக சித்திரை மாதத்தில் சித்திரா பெளர்னமி, வைகாசியில் பிரம்மோத்ஸவம், ஆடியில் ஆடிப்பூரம்,ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி கோவிந்தாப் போடுதல், மார்கழியில் வைகுண்டஏகாதசி, பங்குனியில் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சக்தி வாய்ந்த மூலைக் கருடனிடம் வேண்டுவன கிடைத்தவுடன் விடலைத் தேங்காய் உடைப்பது சிறப்பானவழிபாடாகும். கோவிந்தா போடும் நிகழ்ச்சி வேறு எந்த வைணவக் கோயில்களிலும் இல்லை. சைவ அடியார்களானநாட்டுக்கோட்டை செட்டியார்களில் சிலர் அரியக்குடி பெருமாள் கோவிலால் திருமண் இட்டு வைணவர்களாகவும்விளங்குகின்றனர்.
கோவிந்தா.. கோவிந்தா...
அரியக்குடி திருவேங்கடடையான் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும்கோவிந்தா போடுதல் எனும் சிறப்புவழிபாடு புகழ் பெற்றது. இவ்வூர் நகர்தாதர்கள் எங்கு இருந்தாலும் புரட்டாசிமாதம் திருவோண நாளன்று அரியக்குடியில் கூடி கோவிந்தா போடுவது வழக்கம்.
சேவுகன் செட்டியார் இந்த நாளில்தான் வழக்கமாக தனது திருப்பதி பாதயாத்திரையைத் துவங்குவார். அன்றுகோவிலின் முன்பாக களிமண்ணால் ஒரு பெரிய அகலைக் கட்டுவித்து, அதில் பசு நெய் வார்த்து அக்னி வளர்த்து,பேழையில் இருந்து துணிகளைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு அக்னி ஜுவாலை வளர்த்து பெருமாளின்திருநாமமாகிய கோவிந்தா, கோவிந்தா என்று மனருக ஓங்கிக் கூறி சேவிப்பர். பின்னர் அந்த விளக்கை கைகொட்டிக் கொண்டு வலம் வருவர்.மூதாதையர்களின் நினைவாக (பிதுர் கடன்) இந்த நிகழ்ச்சி காலம் காலமாகநடந்து வருகிறது.
இந்த ஆண்டின் தூய்மையாகப்பராமரிக்கப்பட்ட திருக்கோவில் என்ற விருதையும் பெற்றுள்ளது இந்தத் திருத்தலம்என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கடாசலபதியிடம் வேண்டிக் கொண்டு அவனது திருத்தலத்தை அடைய முடியாதவர்களுக்கு மிகப் பெரும்வரப் பிரசாதமாக அமைந்துள்ளது அரியக்குடி திருவேங்கடடையான் திருக்கோவில். வாழ்வில் ஒருமுறையாவது இந்தத் தலத்திற்கு வந்து சென்றால் மனதில் சஞ்சலம் நீங்கி, சாந்தி உண்டாகும்.
----------
சி. சிதம்பரம் எம்.ஏ., எம்.பில். (பிஎச்.டி.),
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி-3.