ஆடி அமாவாசை.. காசி, கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.. யாத்திரைக்கு தயாராகுங்கள்!
சென்னை: ஆடி மாதம் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்குவார்கள். பித்ருக்கள் எனப்படும் நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும். இந்த பித்ரு தோஷம் தீர நாம் முன்னோர்களுக்கு தர்பணம் தர வேண்டும்.
பித்ரு தர்ப்பணம் செய்யாவிட்டால் ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இந்த நிலைமாற அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.

மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம். மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை கயா யாத்திரை. ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா ஆகிய மூன்று புண்ணிய நகரங்களை உள்ளடக்கியது. இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை. காரணம் அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள். அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள், இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம். நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

காசி யாத்திரை சென்று மூதாதையருக்கு திதி கொடுத்து அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி சந்தோஷப்படுத்தினால் உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழி ஏற்படும். இது போல யாத்திரை செல்ல முடியாதவர்கள் பித்ரு தோஷம் அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் ஆறு, குளக்கரைகளில் தர்பணம், எள், தண்ணீர் தெளித்து காகத்திற்கு உணவு கொடுத்து முன்னோர்களை மனதார வேண்டினால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
ஆடி அமாவாசை அன்று கயாவில் தங்கள் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்யும் வகையில் பாரத் கௌரவ் யாத்திரை சிறப்பு ரயில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 7ம் தேதி நள்ளிரவு புறப்படும் இந்த ரயில் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சென்னை வழியாக குஜராத் பனாரஸ் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சாதாரண பெட்டியில் பயணிப்பதற்கு 22 ஆயிரத்து 350 ரூபாயும், 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணிக்க 40 ஆயிரத்து 350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் பற்றி அறிய 8287932122, 9003140680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் சைவ உணவு வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும். கூடுதலாக, தண்ணீர் மற்றும் காலை தேநீர் ஆகியவற்றிற்கு முறையான ஏற்பாடுகள் இருக்கும். இது தவிர, பாதுகாப்புக் காவலர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர சாவான் அல்லது ஷ்ரவண மாதத்தில் இந்தியா முழுவதும் உள்ள 7 ஜோதிர்லிங்கங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜோதிர்லிங்கம் என்பது சிவபெருமான் ஜோதிர்லிங்க வடிவில் வழிபடப்படும் ஆலயமாகும். இந்தப் பயணம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5, 2023 வரை 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக இருக்கும். ஓம்காரேஷ்வர், மஹாகாலேஷ்வர், சோம்நாத், துவாரகதீஷ் கோயில், நாகேஷ்வர், திரிம்பகேஷ்வர், கிருஷ்னேஷ்வர் மற்றும் பீமாசங்கர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் இருக்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications