சகல ஐஸ்வர்யம் தரும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன்..பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்!
திருவனந்தபுரம்: எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் நிறைந்திருக்கும் என்பது அம்மன் வாக்கு. பெண்களை மரியாதை செய்யுமிடத்தில் தேவதைகள் ஆனந்தமடைகிறார்கள் என்பது நம்பிக்கை. பெண்களை சக்தியின் அம்சம் நிறைந்தவர்களாக கருத வேண்டுமென்று சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் நாரி பூஜை செய்யப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ஆலயம், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது.
பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் எழிலாக அருள்பாலிக்கிறாள். பெண்கள் பலரும், இருமுடி கட்டி விரதம் இருந்து இந்த அம்மனை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கு நடைபெறும் பொங்கல் விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த அம்மன் சக்குளத்துக்காவு பகுதிக்கு எப்படி வந்தார் என்பது பற்றிய கதை ஒன்று கூறப்படுகிறது.
பகவதிஅம்மன் சிலை
ஒரு சமயம் ஒரு வேட்டைக்காரன் காட்டினுள் விறகுவெட்டப் போனான். அவனைக் கொத்துவதற்காக வந்த பாம்பை வெட்டினான். அந்தப் பாம்பு சாகவில்லை. அது ஒரு புற்றின் முகட்டில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்த வேடன் மறுபடியும் பாம்பை அடிக்கச் சென்றான். அப்பொழுது அந்தப் புற்று இரண்டாகப் பிளந்து தண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்து திகைத்து நின்ற வேடனின் முன் முனிவர் ஒருவர் தோன்றினார். அவர் அந்த வேட்டைக்காரனிடம் பயப்பட வேண்டாம் என்று கூறிய முனிவர், நீர் புற்றுக்குள் பராசக்தி ஜலசயனம் நடத்துகிறார் என்றும் புற்றை உடைத்துப் பார்த்தால் அதற்குள் ஒரு அம்மன் சிலை இருக்குமென்றும் முனிவர் கூறினார். அந்தச் சிலையை வனதுர்க்கையாக ஆராதிக்க வேண்டுமென்றும் அப்படிச் செய்தால் புண்ணியம் கிடைக்குமென்றும் கூறினார். பிறகு அவரே புற்றை உடைத்துச் சிலையை வெளியே எடுத்து கொடுத்து விட்டு முனிவர் மாயமாக மறைந்துபோனார்.
அம்மனுக்கு படையல்
அன்று இரவு வேட்டைக்காரனின் கனவில் முனிவராக வந்தவர் நாரத முனிவர் என்று ஒரு அசரீரி கேட்டது. புற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் தெய்வச் சிலைதான் சக்குளத்துக்காவில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை.
புற்றில் இருந்து சிலை கண்டெடுக்கப்பட்ட பிறகு வேட்டைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் தினசரியும் அவர்களால் முடிந்த அளவு சமைத்து தேவிக்கும் படைத்து வந்தனர். ஒருநாள் காட்டுக்குள் போனதில் எதுவும் கிடைக்கவில்லை தாமதமாகவே, சரியான நேரத்துக்குள் தேவிக்குச் சாப்பாடு படைக்க முடியவில்லையே என வருத்தத்துடன் வீடு திரும்பினர்.
அம்மனுக்கு பொங்கல்
அங்கே விதவிதமாக உணவு வகைகள் இலைகளில் பரிமாறப்பட்டிருந்ததைப் பார்த்து அவர்கள் தேவியின் அருளைப் புரிந்துகொண்டனர். அப்போது அம்மனின் குரல் ஒலித்தது. எந்தத் துன்பத்திலும் எனக்கு உணவு படைத்த உங்கள் நல்ல மனதைப் பாராட்டுகிறேன். உங்களது துன்ப நேரங்களில்கூட என்னைக் கைவிடாமல் பார்த்துக்கொண்டீர்கள். பக்தி நிறைத்த மனதுடன் யார் எங்கே நின்று அழைத்தாலும் நான் அருள்புரிவேன் என்று அசரீரி கேட்டது. இந்த நினைவாகத்தான் சக்குளத்துக்காவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து தேவியும் பொங்கலிடுவதாக நம்பப்படுகிறது.
நினைத்த காரியம் நிறைவேறும்
சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் நின்றபடி, புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரியதரிசி, சுப முகூர்த்த வேளையில் பொங்கல் வைப்பதற்கான அடுப்பில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது கருடன் ஒன்று கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.
லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல்
லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டுகளை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா டிசம்பர் 7ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு ஆரம்பமாகும். அதை தொடர்ந்து நைவேத்தியம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச தீபாராதனை, மற்றும் அபிஷேகம், 6.30 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கு மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.
நாரி பூஜை
சக்குளத்துக்காவில் குறிப்பிடத்தக்கக்கது நாரி பூஜை. நாரி பூஜை நாளில் இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்களை விருந்தினராக அழைத்து பூஜை செய்கிறார்கள். அலங்கரித்த இடத்தில் அமரவைத்து மிகவும் பக்தியுடன் பூஜை செய்யப்படுகிறது. பெண்களை மரியாதை செய்யுமிடத்தில் தேவதைகள் ஆனந்தமடைகிறார்கள் என்பது நம்பிக்கை. நம்முடைய வீட்டில் பெண்களை சக்தியும் நன்மையும் நிறைந்தவர்களாக நினைக்க வேண்டுமென்று இந்தப் பூஜை நினைவுபடுத்துகிறது. எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் நாரி பூஜையில் பெண்களுக்கு மரியாதை மரியாதை கொடுக்கும் வகையில் பூஜை நடைபெறுகிறது.
இருமுடி கட்டி வழிபாடு
பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நாரி பூஜை நடைபெறும். அன்று முதல் 27ஆம் தேதி வரை 12 நோன்பு திருவிழா நடைபெறும் இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். இதன் காரணமாகவே பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 26ஆம் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறும். 27ஆம் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.