Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ர தெய்வம் தில்லை காளி.. சாந்த சொரூபி தில்லை அம்மனுக்கு கோலாகல கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தில்லை அம்மன் மற்றும் தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

சிதம்பரத்தில் பழமை வாய்ந்த தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 725 ஆண்டுகளுக்கு முன் கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்டுள்ளது. சிவமும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை உணர்த்தும் விதமாக இக்கோவில் தில்லை அம்மன் மற்றும் தில்லை காளியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது. தில்லை நடராஜர் ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது

Chidambaram Thillai Kali temple kumbabhishekam, kumbabhishekam to goddess Thillai Kali

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச் சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த இரண்டு முனிவர்களான 'ஆனந்தீஸ்வரர்' மற்றும் 'இளமையாக்கினார்' போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள்.

பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது. ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி உக்ரக குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு கட்டத்தில் பெற்று இருந்த சாபத்தினால் சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு நாடகத்தை நடத்தத் துவங்கினார்.

அதற்கேற்ப ஒரு முறை தேவ லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார்.

"இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில் உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன் என்று கூறி சாப விமோசனம் அளித்தார் சிவபெருமான்.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை அதற்கு அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால் அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.

தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால் அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகினார்கள்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுள்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.

போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர்.

பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஓதி அவளை பூஜிக்க அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரும்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி ஆகி அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள். அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும் இன்னொரு சன்னதியில் சாந்தமான நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள் காளியம்மன்.

காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.

தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள். தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம். உடம்பு முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது. சிறப்புமிக்க இக்கோவில் சிதில மடைந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக தற்போது நடைபெற்றது,

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 01ம் தேதியிலிருந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின இன்று 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்த உடன் கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க தலையில் சுமந்து கோவிலை சுற்றி கோபுர உச்சிக்கு சென்றனர் அங்கு புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை மற்றும் கருவறையில் உள்ள சுவாமிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்,பாதுகாப்பு பணிகளுக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாரம் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+