200 பேருக்கு காசி புனித பயணம்..எல்லா செலவும் அரசே ஏற்கும்.. இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு உறுதி
சென்னை: தமிழகத்தில் இருந்து காசி புனித பயணம் செல்லும் 200 பேருக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து
செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நூறு வருட பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. இந்த கொட்டகையை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மீட்கப்பட்டுள்ள பழமையான இடத்தை மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது குறித்து திட்டமிட்டு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளிக்கு அருகில் 1400 சதுர அடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள உருது பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதால் அங்கு போதுமான இடவசதி இல்லை. எனவே மீட்கப்பட்ட இடத்தில் உருது பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும் என்று கூறினார். சென்னை மாநகராட்சியின் விக்டோரியா கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும். ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையடைந்த பின் விக்டோரியா அரங்கை முதலமைச்சர் திறந்து வைப்பார் என்றும் கூறினார்.
அப்பு விட்ட அழகிரி! கலவரக் காடான காங்கிரஸ் ஆபிஸ்! அண்ணன் தம்பி சண்டை என்கிறார் லெனின் பிரசாத்!
காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு நடைபெறுகிறது. இதற்காக பாஜக, சென்னை ஐஐடி இணைந்து தமிழகத்தில் இருந்து ரயில்கள் மூலம் புனித யாத்திரை அழைத்து செல்லப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் நிதி உதவியில் யாரையும் அனுப்பவில்லை. காசி தமிழ் சங்கமத்திற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. எந்த ஒரு துறை மிக சிறப்பாக செயல்படுகிறதோ அந்த துறையை தான் குறை சொல்வார்கள். தமிழ்நாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என பொன்மாணிக்கவேல் தெரிவித்தது வலதுசாரிகளின் குரலாக கூட இருக்கலாம் என்று கூறினார்
காசி யாத்திரை
இந்துக்களாகப் பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். கடமையை முடித்தால் காசிப்பயணம்' என்ற சொலவடையே இதனால்தான் வந்தது. காசியாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் தொடங்கி மறுபடியும் ராமேஸ்வரத்தில் பூர்த்தியாக வேண்டும். காசியாத்திரை என்பது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அற்புதமான யாத்திரை. வடக்கில் இருப்பவர்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை என்றால், தெற்கில் இருப்பவர்களுக்குக் காசி யாத்திரை. காசி யாத்திரை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன.
ராமேஸ்வரம் முதல் காசி வரை
காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் ராமநாதசுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசியாத்திரையை மேற்கொள்ளலாம்.
அறநிலையத்துறை மானியக்கோரிக்கை
2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
200 நபர்களுக்கு ஆன்மீக பயணம்
அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்
இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 15.12.2022 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகர்பாபு விளக்கம்
காசி புனித பயணம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான செலவு அதிகம், பயண தூரம் அதிகம் என்று நினைத்து ஏக்கத்தில் இருக்கின்றனர். இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன், ஆண்டிற்கு 200 பேரை காசிக்கு அழைத்து செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதியை அரசே மானியமாக வழங்கியிருக்கிறது என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.