மகாளய அமாவாசை..காகம் வடிவத்தில் வீடு தேடி வரும் முன்னோர்கள்..உணவிட மறந்துவிடாதீர்கள்
சென்னை: முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்மசக்திகளும் கிடைக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படும் இன்றைய தினத்தில் மறைந்த முன்னோர்களை மகிழ்விக்க நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

மகாளய அமாவாசை தர்ப்பணம்
மகாளய அமாவாசை காலத்தில் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து வர வேண்டும் என்பதற்காகவே ஏராளமானோர் வேதாரண்யம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட பல புண்ணிய தலங்களில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். புனித நீராடி திதி கொடுத்து முன்னோர்களை வணங்கிய பின்னர் தானம் கொடுக்க வேண்டும்.

தலைமுறைகளை மறக்க வேண்டாம்
நமது மூததையர்கள், முன்னோர்களை மறக்க கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும்.

தர்ப்பணம் யார் யாருக்கு தரலாம்
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாய் வழி தாத்தா, கொள்ளுத்தாத்தா, தந்தை வழி பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழி பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு திதி கொடுக்கலாம். அதே போல இறந்து போன அப்பா, அப்பாவின் சகோதரர்கள், சகோதரிகள் அவர்களது கணவர்கள் இறந்து போன குரு, எஜமானர், நண்பர்களுக்கும் கூட திதி கொடுக்கலாம்.

படையல்
மகாளய அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மகாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.

பித்ரு காரியங்கள் தரும் நன்மை
இந்த மஹாளய அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அதோடு சிவ பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பான அம்சம். முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய்,தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

காகங்களும் சனிபகவானும்
முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக வடிவத்தில் முன்னோர்கள்
மகாளய பட்ச காலத்தில் விரதம் இருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தினமான நாளைய தினம் வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு அனைவரும் சாப்பிடுவது நல்லது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மகாளய அமாவாசை எப்போது?
மகாளய அமாவாசை இந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று மஹாளய அமாவாசை வருகிறது. 2024ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மஹாளய அமாவாசை வருகிறது. இந்த நாட்களில் காசி, கயா உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications