திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 10: கும்பகர்ணன் போல் தூங்குறியே! 1000 ஆண்டுக்கு முன் ஆண்டாள் கலகலப்பு
திருப்பாவை - பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: முற்பிறவியில் பாவை நோன்பு இருந்து கண்ணனை வணங்கி இந்த பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே! உன்னை நாங்கள் பல முறை எழுப்புகிறோமே உனக்கு கேட்கவில்லையா, எழுந்திருக்காவிட்டாலும் சரி, பதிலாவது சொல்லலாமே, மணம் மிக்க துளசி மாலையை தலையில் சூடியிருக்கும் நாராயணன் நாம் வேண்டிய வரங்களைத் தருவார். எமனின் வாயில் விழுந்த அந்த கும்பகர்ணன் உனக்கு தூக்கத்தைத் தந்தானா? எங்கள் குலத்திற்கு அருமையான ஆபரணம் போன்றவளே! உன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறப்பாய்!
விளக்கம்: கும்பகர்ணன் போல் தூங்குகிறாயே என நாம் சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் இந்த நகைச்சுவையை ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சொல்லியிருக்கிறாள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
திருவெம்பாவை பாடல் - 10
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: தீய செயல்களை செய்யாத குலத்தில் பிறந்தவர்களும் கோயில் திருப்பணியை செய்பவர்களுமான பெண்களே!! நம் தலைவன் சிவனின் சொல்தற்கரிய பெருமைக் கொண்ட பாதங்கள் 7 பாதாள உலகங்களையும் கடந்து கீழ இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் சிவனின் திருமுடி, வானத்தின் எல்லைகளை கடந்துள்ளது. வேதங்களும் விண்ணோர்களும் மண்ணோர்களும் (பூலோகம்) ஒன்று சேர்ந்து பாடினாலும் அவன் புகழை பாடி முடித்துவிட முடியாது. அவனுடைய ஊர் எது, பெயர் என்ன, உறவினர்கள் யார், பக்கத்து வீட்டுக்காரர்கள் யார், எந்த பொருள்களால் அவனை பாட முடியும்? என சொல்லவே முடியவில்லை.
விளக்கம்: சிவனின் பெருமைகளை உயர்த்தி பாடும் பாடல் இது.












Click it and Unblock the Notifications