திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 18: பெருமாள் கோயிலுக்கு போனால் முதலில் யாரை சேவிக்க வேண்டும்?
திருப்பாவை - பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: மத யானையை போல் வலிமையுடைய தோற்காத திண்ணிய தோளன், நந்தகோபாலன் மருமகளே! நறுமணம் வீசும் கூந்தலினாய்.. நப்பின்னையே! வாசனை வீசும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது.
குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் தொடங்கிவிட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் மனம் மகிழ்ச்சியடையுமே!
விளக்கம்: பெருமாள் கோயிலுக்கு போனால் நேராக சுவாமியை தரிசிக்கக் கூடாது. முதலில் தாயாரை சேவித்துவிட்டு பிறகுதான் பெருமாளை தரிசிக்க வேண்டும்.
திருவெம்பாவை பாடல் - 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: அனைத்து தேவர்களும் சிவனிடம் சென்று அவருடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகிறார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிருந்த மணிக்கற்களால் இழைக்கப் பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம்முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்போது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அண்ணாமலைப் பெருமான் அடிக்கமலத்துடன் சென்று வணங்குகின்ற தேவர்களது முடிமணியின் ஒளிகள் எப்படி மறைகின்றனவோ அதுபோல் மறைகின்றன என்று சொல்லி, பெண்ணாகியும், ஆணாகியும், அர்த்தநாரீஸ்வருமாக விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இந்த குளத்தில் நீராட வேண்டும்.
விளக்கம்: ஆண், பெண் நீங்கலாக மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இது இறைவனின் அதிசயம். அதனால் அவர்களை திருநங்கை என பெயர் சூட்டி அழைக்கிறோம். இறைவனே அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் போது மனித படைப்பை யாரும் கிண்டல் செய்யக் கூடாது.












Click it and Unblock the Notifications