பழனி தைப்பூசம்..தேரோட்டம் காண வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைவார்கள்..அமைச்சர் சேகர்பாபு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிப்ரவரி 3ஆம் தேதி திருக்கல்யாணமும் 4ஆம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது.
பழனி: அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். முக்கிய நிகழ்வுகளாக திருக்கல்யாணம் பிப்ரவரி 3ஆம் தேதியும் 4ஆம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. தைப்பூச நாளில் முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தை மாதத்தில் பூச நட்சத்திமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது.

பழனியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும். பிப்ரவரி 4ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் 29ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றப்பட்ட நாள் முதல் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம்நாள் திருவிழாவான பிப்ரவரி 3ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும், பிப்ரவரி 4ஆம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தைப்பூச திருவிழாவிற்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. முருக பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் என்று கூறினார். பக்தர்கள் பலரும் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். தினசரியும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் தைப்பூசம் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மகாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் 5 முக்கிய சிவ ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications