வீட்டில் எண்ணி வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் வர வேண்டுமா? இதை செய்ய மறக்காதீர்கள்!
சென்னை: இன்றைய கால கட்டத்தில் பணத் தேவை அனைவருக்குமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனையோ கஷ்டங்களை கடந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. கடனாக நம்மிடம் பணம் வாங்கியவர்கள் கூட பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி விடுகின்றனர். நமக்கு தடையின்றி பணம் வரவும், வீண் விரைய செலவுகள் ஏற்படாமல் தடுக்கவும், கொடுத்த கடன்கள் திரும்ப வசூலாகவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். எந்த நாளில் என்ன பரிகாரம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நம்முடைய வீட்டில் எத்தனையோ கடவுள் படங்கள் இருக்கும். மனதிற்கு பிடித்த தெய்வம், குல தெய்வம், இஷ்ட தெய்வம் என பல தெய்வங்களின் படங்களை வைத்து வழிபட்டு வருவோம். அதில் செந்தாமரை மீது அமர்ந்த மகாலட்சுமி படத்தை வைத்து வழிபட பண வரவு அதிகரிக்கும்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட செல்வம் பெருகும். அதுவும் கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டோ அல்லது 21 அடி அருகம்புல் நிலை மாலை சாற்றியோ வணங்க தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வம் பெருகும். அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வெள்ளிக்கிழமையில் வழிபட பண வரவு அதிகரிக்கும். 11 அகல் விளக்கு தீபம் ஏற்றி 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும். அது போல முருகப்பெருமானை செவ்வாய்கிழமை செவ்வரளி மாலை சாற்றி வணங்க நினைத்த காரியம் கைகூடும். வேலை, தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். முருகப் பெருமானுக்கு, செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நம்முடைய வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றி வழிபடுவோம். அந்த விளக்கில் சில டைமண்ட் கல்கண்டு போட்டு வணங்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். குபேர பூஜை செய்வது செல்வ வளத்தை அதிகரிக்கும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, சோடஷ கலை நேரத்திலும் குபேர பூஜை செய்யலாம். செல்வத்திற்கு அதிபதியான குபேரன் அருளால் பண வரவு தடையின்றி வரும்.
வியாழக்கிழமை குரு ஹோரையில் விளக்கேற்றி வழிபட நல்ல வேலையும், தொழிலில் வெற்றியும் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் உண்டாகும். பச்சை நிற பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. கோவிலில் மகாலட்சுமிக்கு தாமரை மலர் கொடுத்து வணங்கி அதை வாங்கி வந்து பச்சை நிற துணியில் சுற்றி பணப்பெட்டியில் வைக்க குறைவின்றி செல்வம் பெருகும்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமல் நல்ல வாசனை வீசுகிறதோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரிக்கும். நம்முடைய வீடு தூய்மையாகவும் வாசனை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜை அறையில் வீட்டிற்கு பன்னீர் தெளிக்க, சாம்பிராணி தூபம் போட லட்சுமி கடாட்சம் பெருகும். ஆந்தை அற்புதமான பறவை. பண வரவை தரும் பறவை. ஆந்தை படத்தை தொடர்ந்து பார்த்து வர தடையின்றி பணம் வரும்.
கடன் பிரச்சினையில் சிக்கித்தவிப்பவர்கள் பிரதோஷ காலத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். சுவாதி நட்சத்திர நாளில் நரசிம்மர் வழிபாடு செய்வது கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியை காட்டும். யோக நரசிம்மர் வழிபாடு எத்தகைய கடன் பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது.
நாம் கடனாக கொடுத்த பணம் பல நேரங்களில் நமக்கு திரும்ப கிடைக்காது. கடன் கொடுத்த பணம் நமக்கு திரும்ப வீடு தேடி வர வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான பரிகாரம் முருகன் கோவிலில் செவ்வாய்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதே போல சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் 8 செவ்வாய்கிழமை செவ்வரளி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன்கள் வசூலாகும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வெள்ளை மொச்சையை வேகவைத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து படையலிட்டு சாப்பிட பண வரவு அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களும்..நேர்மறை சிந்தனைகளும் உள்ள இடத்திலும் நல்ல வார்த்தைகளும் பேசப்படும் வீட்டில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள்.
எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அது தவிர நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் கொண்டிருப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். தீயவை திரும்பி பார்க்காமல் விலகிப்போய்விடும். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் மனம் போல வாழ்வு..எண்ணம் போல வாழ்வு என்று சொல்லி வைத்திருக்கின்றனர். நல்லதை நினைப்போம் மனநிறைவோடு வாழ்வோம்.