அஞ்சறைப்பெட்டி சமையலுக்கு மட்டுமல்ல..வீட்டில் பணம் பெருக இப்படி செய்து பாருங்களேன்!
சென்னை: பணம் தினசரி தேவைக்கு அவசியமானதாக இருக்கிறது. ஒருவருக்கு 100 ரூபாய் தேவை என்றால் ஒரு சிலருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. நம்முடைய வீட்டில் இருக்கும் பணம் பல வழிகளில் பெருக வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். பணமானது விரைய செலவாகாமல் சுப செலவாக மாற வேண்டும் என்றும் நாம் செலவு செய்யும் பணம் பல வழிகளில் நமக்கு திரும்ப வர வேண்டும் என்றும் பலரும் விரும்புகின்றனர்.
பணம் பெருக செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை செய்வதன் மூலம் பணம் பெருகும்.
நம்முடைய அம்மா சமையல் அறையில் பல இடங்களில் பணத்தை பதுக்கி வைத்திருப்பார். அரிசி டப்பா, அஞ்சறை பெட்டி, மிளகாய் டப்பா என எத்தனையோ டப்பாக்களில் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்திருப்பார். அந்த சிறு சேமிப்பு பணம் ஏதாவது ஒரு வகையில் செலவுக்கு உதவி செய்யும்.
நாம் சம்பாதிக்கும் பணம் நமக்கு பல வழிகளில் உதவி செய்ய வேண்டும். அதே போல அந்த பணம் பல்கி பெருக வேண்டும். அதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. ஆன்மீக ரீதியாக செய்யப்படும் அந்த பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மல்லிகைப்பூக்கள்
மல்லிகை சுக்கிரனின் அம்சம்.. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம்.. நம்முடைய வருமானத்தில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். இதன் மூலம் பண வருமானம் பல வகையிலும் பெருகும். நமக்கு வரும் வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை தானம் தர்மம் செய்வதற்கு என போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்.

பணத்தை மதியுங்கள்
பொதுவாகவே நம் அனைவரும் வீட்டில் கண்ட இடங்களில் பணத்தை போட்டு வைக்கக் கூடாது. பணத்தை மதிக்க வேண்டும். பீரோவிலோ, பெட்டியிலோ வைக்கும் பணத்தை ஒருவர் கைப்பட வைத்து எடுத்து செலவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் வாங்கி வரும் சம்பளம் அல்லது தொழிலில் ஈட்டிய லாபம் பணத்தை வீட்டில் தென்மேற்கு திசையில், வடக்கு பார்த்து வைப்பது நல்லது. அந்த இடத்தில் நீங்கள் பணத்தை வைக்கும் பொழுது அதனுடன் சேர்த்து உதிரி மல்லிகையையும் வைக்க வேண்டும்.

சுத்தமான வீட்டில் செல்வம் சேரும்
வாசம் உள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்ட இடங்களில் குப்பையை போட்டு வைத்திருக்க கூடாது. வீட்டினை சுத்தம் செய்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வீட்டினை துடைக்க வேண்டும். பணத்துடன் சேர்த்து ஏலக்காய், சோம்பு, பச்சைக்கற்பூரம் போன்ற பொருட்களை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.

செல்வம் சேரும் இடம்
நம்முடைய வீடு அல்லது தொழில் நிறுவனத்தில் வைக்கும் பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

வெற்றிலை
வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம். பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணம் சம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை உடன் வைத்துக்கொள்ளவும்.

பட்டை லவங்கம்
மசாலா பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகம். லவங்கம் பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி அதனை பணம் வைக்கும் பர்ஸ் அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

அஞ்சறைப்பெட்டி
சமையல் அறை அஞ்சறைப்பெட்டியில் மசாலா பொருட்களை போட்டு வைத்திருப்போம். அதில் வெந்தையம் வைக்கும் டப்பாவில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அதே போல சோம்பு வைக்கும் டப்பாவிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் பண வருமானம் வருவதற்கான வழி தெரியும்.

எலுமிச்சை
பணத்தை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பணம் அதிகம் பெருகும்.வ டகிழக்கு மூலையில் கண்ணாடி டம்ளர் வைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பணப் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

விளக்கேற்றுங்கள்
மகாலட்சுமி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும். கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் கண் திருஷ்டி நீங்கி பணம் பெருகும். இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றினை நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். நிச்சயம் விரைய செலவுகள் குறைந்து பணம் பெருகும்.












Click it and Unblock the Notifications