சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்..பாதுகாப்பு குளறுபடிகள்..தேவசம்போட்டு நிர்வாகம் புது உத்தரவு
சபரிமலை : சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில் மாநில அரசு காவல்துறை, தேவசம்போர்டு இடையே குளறுபடிகள் எழுந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மண்டல பூஜைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து துறையினரும் ஒருங்கிணைத்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரியும் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். அவர்களை நெரிசலின்றி 18ஆம் படி ஏற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும், கோவில் ஊழியர்களும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என்றாலும் சன்னிதானம் சென்று பக்தர்கள் 18ஆம் படி ஏற பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பல பக்தர்கள் மயக்கமடைந்தனர். காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநில அரசு மீதும், தேவசம்போர்டு நிர்வாகம் மீதும் பக்தர்கள் கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். நேற்று தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் ராஜன், ராஜேஷ் சபரிமலை வந்தனர். மாவட்ட ஆட்சியருடன் உயர் அதிகாரிகளுடன் பம்பையில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பல துறைகள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டினர். குறிப்பாக 18 படிகளில் பக்தர்களை ஏற்றுவதற்கு அனுபவம் இல்லாத போலீசாரை நியமித்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் கூறினார். இதனால் கோபம் அடைந்த ஏடிஜிபி அஜித்குமார் 18ஆம் படியின் கட்டுப்பாட்டை வேண்டுமானால் தேவசம்போர்டு தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறவே ஏடிஜிபி அதிருப்தி அடைந்தார்.
அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். சன்னிதானத்தில் ஆய்வு செய்த டிஜிபி அனில்காந்த், 18படிகளில் தற்போது நிமிடத்திற்கு 60 பேர் ஏறுகின்றனர் அதை 80ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். முதியவர்கள், பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். பம்பைக்கு வரும் வாகனங்களும் திரும்பி செல்லும் வாகனங்களும் இணையாக பராமரிக்கப்படும் என்றும் கூறினார்.
மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதால் காவல்துறையினரும் தேவசம் போர்டு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கோவிலுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் தனி வரிசை ஏற்படுத்தவும் கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.மேலும் கூட்ட நெரிசல் உள்ள நாட்களில் 18-ம் படியில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை ஏற்றி விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சபரிமலைக்கு வரும் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களாலும் பம்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களும், தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களும் அவர்களின் வாகனங்களை எடுத்து செல்ல முடியாத அளவுக்கு அங்கு நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சீர்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை போக்க பார்க்கிங் வசதியை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வெளிமாநில பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வெளிமாநில பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சபரிமலை வனபகுதியில் கூடுதல் இடவசதி செய்து கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்காக வனத்துறையுடன் பேசி பார்க்கிங் பகுதிகளை கண்டறிந்து அங்கு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் இந்த பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications