கோலாகலமாக தொடங்கும் தைப்பூச திருவிழா.. பழனி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றம்! குவியும் பக்தர்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
திண்டுக்கல்: பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும் தைப்பூச திருவிழா நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பக்தர்களின் வருகையால் பழனியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், குடிநீர், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
பழனி கோவில் கும்பாபிஷேகம்..இறைச்சி கடைகள் திறக்க தடை..என்னென்ன கட்டுப்பாடுகள்
புகழ்பெற்ற தைப்பூச திருவிழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருகை தருவார்கள். இதனால் 10 நாட்களுக்கும் மேலாக பழனி முழுவதுமே விழாக்கோலமாக காட்சியளிக்கும்.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெறுகின்றன.
காப்புக்கட்டு
அதைத்தொடர்ந்து, கொடி பூஜை, வாத்திய பூஜை நடைபெற்று பின்னர் கொடியேற்றம் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோயிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர்.
வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம்
இதன் தொடர்ச்சியாக, தைப்பூச திருவிழாவையொட்டி நாள்தோறும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல், இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வரும் 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
என்னென்ன நிகழ்வுகள்?
அதற்கு மறுநாள் 4-ம் தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 7-ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.