வியாழக்கிழமை பிரதோஷம்..இன்று சிவ ஆலயத்தில் நீங்கள் செய்யும் தானம்..வாழ்க்கையை மாற்றியமைக்கும்
மதுரை: குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் பிரதோஷ நாளில் இறைவனை தரிசிக்க குரு அருள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். இன்றைய தினம் சிவ ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவாரப் பிரதோஷம் இன்றைய தினம் சிவனை வழிபடுவதோடு தட்சிணாமூர்த்தியையும் வழிபட நன்மைகள் நடக்கும். தயிர்சாதம் தானம் செய்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பிரதோஷ காலம் என்பது சிவ வழிபாட்டிற்கு உகந்த நேரமாகும். மாதந்தோறும் தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதி சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவாலயங்களில் இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ நேரம் ஆகும். இந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட பழமொழியாகும். தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும் அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அதேபோல் குரு திசை நடப்பவர்கள்,குரு புத்தி, குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்களும் தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களும் சிவாலயங்களில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவனை வழிபாடு செய்வதால் அவர்களது வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் குறிப்பிட்டுள்ளது. பிரதோஷ நாளில் விரதம் இருந்து மாலையில் சிவ ஆலயத்திற்கு சென்று நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்து இறைவனை தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்கும்.
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது சிறப்பு. திரயோதசி திதி வரும் நாளில் சிவ ஆலயங்களில் அவரது வாகனமான நந்தி தேவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பாக அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். நந்திக்கு தீபாராதனை முடிந்த பின்னர் சிவனுக்கு ஆராதனை செய்யும் போது நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசனம் செய்வது சிறப்பு.
சிவ பெருமானுக்கும் நந்தி தேவருக்கு சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். அருகம்புல், செவ்வரளி, வில்வ இலைகளை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். தயிர்சாதம் பிரசாத விநியோகம் செய்யலாம். வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுக்க நன்மைகள் நடக்கும். பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித்தர சுகமான வாழ்வும் சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.
குருபகவான் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இன்றைய தினம் பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும். இன்றைய தினம் திருச்செந்தூர், ஆலங்குடி, பாடி திருவலிதாயம், தென்திட்டை குருபகவான் ஆலயங்களிலும் இன்றைய தினம் குருவார பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும். குருவாரமான இன்று தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவார்கள் பக்தர்கள். மாலையில், சிவாலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.