திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்..தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ்
திருப்பதி: திருப்பதியில் நவம்பர் 1ம் தேதி முதல் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மீண்டும் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் விஐபி பிரேக் தரிசன நேரத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம், விரைவு தரிசனம், விஐபி தரிசனம் என பல வித தரிசனங்கள் உள்ளன. 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால் சில மணி நேரங்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
இலவச தரிசனத்திற்கு செல்பவர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் 40 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேரிடுகிறது. புரட்டாசி மாதத்தில் 3 நாட்கள் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தவிர்க்க சில ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..தேவஸ்தானம் வேண்டுகோள்!
இலவச தரிசன டோக்கன்
திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று தேவஸ்தான முதன்மைச் செயலாளர் ஏ.வி.தர்மாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறையை நிறுத்தியது. எனினும், பக்தர்களின் வசதிக்காக கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் தேதி டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க முடிவு செய்தது.
நவம்பர் 1 முதல் டைம் ஸ்லாட் டோக்கன்
அதன்படி நவம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கன்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
25 ஆயிரம் டோக்கன்
வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட நாளில் பக்தர்களின் வருகையை பொருத்து டைம் ஸ்லாட் டோக்கன் வினியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் வழங்கப்படும். டைம் ஸ்லாட் டோக்கன்களின் ஒதுக்கீடு அன்றைய தினம் தீர்ந்து விட்டால், பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2க்கு சென்று சாமி தரிசனத்துக்காக தங்கள் முறை வரும் வரை காத்திருக்கலாம்.
விஐபி தரிசன நேரத்தில் மாற்றம்
சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வி.ஐ.பி. தரிசன நேரத்தை வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் காலை 8 மணியாக மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இது மிகவும் பொதுவான பக்தர்களுக்கு தரிசன வசதிக்கு பயனளிக்கும் மற்றும் தங்குமிடத்தின் மீதான பிரச்சினையை குறைக்கும். ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஸ்ரீவாணி டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் தங்குமிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும், காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் நடக்கிறது. வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு ஏகாந்தசேவை நடக்கிறது. பின்னர் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தரிசனம் தொடங்கும்.
ஆர்ஜித தேவைகள்
வாராந்திர ஆர்ஜித சேவைகளுக்குப் பிறகு தோமால சேவை, அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும். இதையெல்லாம் முடிப்பதற்குள் காலை 10 மணி ஆகிறது. இதனால் நள்ளிரவுக்குமேல் வரிசையில் செல்லும் பக்தர்கள் காலை வரை இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்க வேண்டி உள்ளது.
விஐபி பிரேக் தரிசன நேரம் மாற்றம்
அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது, ஆர்ஜித சேவைகளின் நேரத்தை மாற்ற முடியாத சூழ்நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் காலை 6 மணியில் இருந்து பொதுப் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க முடியும் என்பது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கருத்தாகும். இதனிடையே டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடும் ஆன்லைனில் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.