திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் மார்கழி,புத்தாண்டு..பூஜை நேரங்கள்..அதிகாலையில் நடை திறப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் அதிகாலை 1 மணிக்கு சுப்ரமணியசுவாமி கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். கடலோரத்தில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை காண ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி திருவிழா, மாசி திருவிழா என திருவிழாக்கள் நிகழ்ந்தாலும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுத்து வருவார்கள்.

கார்த்திகை,மார்கழி மாதங்களில் மட்டுமல்லாது தை பூசம், மாசி மகம் என பல மாதங்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து பாதையாத்திரையாக முருகப்பெருமானை காண வருவார்கள். மார்கழி மாதங்களிலும் புத்தாண்டு, தை பொங்கல் தினத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம். மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவில் நடை திறப்பு பூஜை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு தமிழ் மாதமான மார்கழி நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
ஆருத்திரா தரிசனம் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று ஜனவரி 15ஆம் தேதி கோவில் ஞாயிறுக்கிழமை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications