வைகாசி மாத பூஜை... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு - என்னென்ன கட்டுப்பாடுகள்
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. வைகாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படும் கோவில் நடை 19ஆம் தேதி வரை திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இது தவிர ஒவ்வொரு தமிழ்மாத முதல் நாளிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.14ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மறுநாள் 15-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று முதல் 19ஆம் தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.