வைகுண்ட ஏகாதசி..ஸ்ரீரங்கநாதரை தரிசித்த 15 லட்சம் பக்தர்கள்..டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்
செய்துள்ளனர். முத்தங்கி சேவையில் அருள்பாலித்த மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.1 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரத்து 460க்கு கட்டண சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன.
ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் "திருவரங்கம்" என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாதர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
புராணங்களின் படி ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக ஸ்ரீராமர் முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவிலிருந்த விநாயகரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவேரி நதி தீரத்திற்கு சென்றார் விபீஷணன்.
விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டார் விநாயக பெருமான். பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்தை அறிந்து, அதை அகற்றுவதற்கு முயற்சித்தான். அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார்.
அப்போது இப்பகுதியை ஆண்ட தர்ம வர்ம சோழன் ரங்கத்தாருக்கு ஆலயம் எழுப்பினான். சில காலங்களில் அது காவிரி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றுமணலில் முற்றிலும் புதைந்து போனது. பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை தினந்தோறும் ஆற்றுப்பகுதிக்கு வந்து தேடலானான். அப்படி ஒரு முறை இங்கு வந்த போது ரங்கநாதர் ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்படும் பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோவில் வளாகத்திலிருந்த மரத்தில் வசித்த கிளி ஒன்று நன்கு கவனித்தபடியால் அம்மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தது. இதை வைத்து புதைந்த கோவில் இருக்கும் இடத்தை அந்த மன்னன் கண்டுபிடித்து மீண்டும் சீரமைத்து கட்டியதால் கிளிச்சோழன் என அந்த சோழ மன்னன் அழைக்கப்பட்டான்.
5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.
இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து கோதை என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் அரங்கனுள் ஐக்கியமானாள்.
இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது. இங்கு தான் கவிச்சக்கரவத்தி கம்பர் தன் கம்பராமாயணத்தை அரங்கேற்றம் செய்து அந்த நரசிம்ம மூர்த்தியாலேயே பாராட்டப்பெற்றார். இந்த கோவிலின் இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள். எனவே அவள் துலுக்க நாச்சியார் என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.
நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்..ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிறைவு
இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.
நவகிரகங்களில் சுக்கிரனின் அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் சுக்கிரன் பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கிருக்கும் சக்ரத்தாழ்வார் சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் இக்கோவிலில் சொர்க்க வாசல் திறந்து, அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது சிறப்பு அம்சமாகும். இங்கு நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்களின் எண்ணிக்கை விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த மாதம் 23ஆம் தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ச்சுனா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10ஆம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெற்றது.
ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 20 நாட்களில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 289 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதித்தார். இதை காண தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சிறப்பு கட்டண சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.1 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரத்து 460க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை முதல் நாளில் இருந்தே அதிகமாக காணப்பட்டதால் இந்த ஆண்டு வருமானமும் அதிகரித்துள்ளது.