வசந்த பஞ்சமி நாளில் வரும் வாஸ்து நாள்..வீடு கட்டும் யோகம் கிடைக்க வராகியை வழிபடுங்கள்
சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த பஞ்சமியும் வாஸ்துநாளும் வரக்கூடிய நாளைய தினம் அன்னை வராகியை வழிபடலாம். வராகி வழிபாடு வளங்களை தரும் என்பது நம்பிக்கை.
சென்னை: வசந்த பஞ்சமி நாள் அற்புதமான நாள். இந்த நாளில் செய்யும் செயல்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. பஞ்சமி திதி இன்று ஜனவரி 25 புதன்கிழமை மாலை 6.48 முதல் மறுநாள் 26.1.2023 வியாழக்கிழமை மாலை 5.11 மணி வரைக்கும் உள்ளது. வாஸ்து நாளும் வருவதால் சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்னை வராகி தேவியை வழிபடலாம்.
பஞ்சமி திதி மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, உத்ததராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிளை பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வசந்த பஞ்சமியை வடமாநிலங்களில் சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக கொண்டாடுகிறார்கள். வசந்த பஞ்சமி நாளன்று புனித நதிகளில் நீராடிய மக்கள் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடுகின்றனர்.
வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம். வசந்த பஞ்சமி நாளில் வராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். நாளைய தினம் கூடவே வாஸ்து நாளும் வருவது சிறப்பு. சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் வராகி தேவியை வழிபட நன்மைகள் நடைபெறும்.
தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும். வசந்த பஞ்சமி அன்று பக்தியோடு விரதம் இருந்து அம்மனை வணங்கினால் அற்புதங்கள் பல நடக்கும்.
வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் இந்த வசந்த பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த மஞ்சள் நிறம் தேவர்களால் விரும்பப் படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.
உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது. பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனியவரிடம் கல்வி கற்று கொள்ள குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி அன்றுதான் .
வசந்த பஞ்சமி நாளில் வராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வராகி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வராகி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். நிலம், சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கை.
சியாமளா நவராத்திரி..வசந்த பஞ்சமி..உங்க ஜாதகத்தில் சரஸ்வதி யோகமிருக்கா? பேசியே ஜெயிக்கலாம்
வசந்த பஞ்சமியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வியாழக்கிழமை ஷியாமளா நவராத்திரி வசந்த பஞ்சமியில் மாபெரும் வராகி யாகம், ராஜ மாதங்கி யாகம் ஸ்ரீ பாலா ஹோமம் அபிஷேகம் புஷ்பாஞ்சலி சிறப்பு அர்ச்சனை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு பாரதா மாதாவிற்கு சிறப்பு ஹோமம் பூஜை நடைபெறுகிறது.
27.01.2023 வெள்ளிக்கிழமை 21 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பகவானுக்கு முதலாமாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் விஷேச திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 28.01.2023 சனிக்கிழமை ரதசப்தமியை முன்னிட்டு 7 குதிரைகளைக் கொண்டு அஸ்வமேத பூஜையுடன் லக்ஷ ஜப அஸ்வாரூடா யாகம் துவங்கவுள்ளது. ஜனவ 30ஆம் திங்கள்கிழமை ஷியாமளா நவராத்திரி பூர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ ராஜ மாதங்கி தேவிக்கு சிறப்பு ஹோமம், பூஜை மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறவுள்ளது.