கொடுமை.. கட்டி பிடிக்கும் சீனுக்கு 17 முறை ரீடேக் வாங்கிய நடிகர்! ஹேமா அறிக்கையில் நடிகை குமுறல்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையில், ஒரு நடிகர் , நடிகையுடன் நெருக்கமாக கட்டி பிடிக்கும் காட்சியில் நடிக்க 17 டேக்குகள் வரை வாங்கியதாக அந்த நடிகை கண்ணீர் மல்க தெரிவித்தாராம்.
கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளம், தமிழில் நடித்த நடிகை ஒருவர், நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் கைதாகினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாகவும் அவற்றை முன்னணி நடிகர்களே சிலர் அரங்கேற்றுவதாகவும் நடிகைகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் கமிஷனை கேரள அரசு நியமித்தது.
இந்த நிலையில் அந்த குழுவானது அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு சமர்பித்துவிட்டது. ஆனாலும் அதை கேரள அரசு வெளியிடாமல் இருந்தது. இந்த அறிக்கை குறித்து நடிகை பார்வதி நாயர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே பேசியிருந்தார். இந்த அறிக்கையில் பல ரகசியங்கள் இருப்பதால் இதை வெளியிடாமல் கேரள அரசு காலம் தாழ்த்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
4 ஆண்டுகளாக தங்களுக்கு எப்போது விடிவு பிறக்கும் என நடிகைகள் எதிர்பார்த்திருந்த அந்த ஹேமா கமிஷன் அறிக்கை இன்றைய தினம் வெளியானது. அதில் முத்தக் காட்சி, கட்டிப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஏற்கெனவே பாலியல் தொல்லைக்குள்ளான ஒரு நடிகையை கட்டி பிடித்துதான் நடிக்க வேண்டும் என ஒரு நடிகர் கட்டாயப்படுத்தினார்.
இதை தனக்கு சாதகமாக்க நினைத்த அந்த நடிகர் அந்த கட்டி பிடிக்கும் சீனை 17 முறை நடித்து காட்டி ரீடேக் வாங்கி 18ஆவது முறைதான் ஓகே வாங்கினாராம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பது அந்த நடிகைக்கு அப்பட்டமாக தெரிந்தது. இந்த சம்பவத்திற்கு நடிகரை திட்டாமல், நடிகையை இயக்குநர் மிகவும் மோசமாக விமர்சித்தாராம்.
அடுத்த நாள் முதல் அந்த நடிகருடன்தான் கணவன், மனைவியாகவே அந்த நடிகைக்கு நடிக்க வேண்டிய சூழல் எழுந்ததாம். தினமும் கட்டி பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வைத்தாராம். தினமும் அவருடன் அப்படி நடிப்பது கொடுமையாகவே இருந்ததாம். பொதுவாகவே பெண்கள் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற தவறான கருத்து இருக்கிறது.
பெண்கள் சினிமாவிற்கு வருவதற்கு காரணம் அவர்களுக்கு நடிப்பு மீதும் கலையின் மீதும் ஆர்வம் இருப்பதால்தான் என்பதை ஒரு போதும் நடிகர்கள் கற்பனையில் கூட நினைக்க மாட்டார்கள். ஒரு படத்தின் வாய்ப்புக்காக யாருடனும் படுக்கையை பெண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற தவறான கருத்து உள்ளது.
இந்த படுக்கைக்கு அழைத்து எந்த நடிகையாவது வராவிட்டால் அவர் பிரச்சினைக்குரியவர் என்ற முத்திரை குத்தப்பட்டு அவரால் மீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பவே முடிவதில்லை. எனவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பெண்கள் இது போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மலையாள சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் இது போன்ற வன்கொடுமையை சந்தித்திருப்பார்கள், ஆனால் அதை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications