"போலாம் ரைட்".. ஒரே பஸ்ஸில் கண்டக்டர் - டிரைவர் தம்பதி.. கலக்கும் காதல் ஜோடி.. பூரித்துப்போன கேரளா
காதல் ஜோடி ஒன்று கேரள அரசு பஸ்ஸில் கண்டக்டர் - டிரைவராக பணியாற்றி வருகிறார்கள்
திருவனந்தபுரம்: ஒரே பஸ்ஸில் கணவனும், மனைவியும் டிரைவர், கண்டக்டராக பணியாற்றிவருவது கேரளாவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்னைக்கு இருக்கக்கூடிய பொருளாதார சூழலில், கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்..
அதேசமயம், எந்த ஒரு இடத்தில் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்தாலும், அங்கு நிச்சயம் பிரச்சனைகளும், சில தர்மசங்கடங்களும் எழுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன..
தர்மசங்கடம்
எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும், சம்பள விஷயம் முதல், புரமோஷன்கள், மரியாதை உட்பட பல விவகாரங்கள் அங்கு வெடிக்கும்.. அதிலும், மனைவிக்கு கூடுதலாக சம்பளம், அல்லது மரியாதையை அந்த நிறுவனம் தந்துவிட்டால், சில கணவனுக்கு சங்கடங்களும், வருத்தங்களும் இயல்பாகவே இருக்கத்தான் செய்கின்றன.. மற்றொரு முக்கிய பிரச்சனை, அழகான மனைவிகள் அமைந்துவிட்டால், அந்த அலுவலகத்தில் சில கணவன்களுக்கு அவர்களை கண்காணிப்பதே, ஒரு பெரிய வேலையாகிவிடும்.. இது ஒரு மனஉளைச்சலாக உருவெடுத்து, கடைசியில் மனோவியாதியாகவும் அமைந்துவிடும்.
சிக்கல்கள்
இத்தனை நடைமுறை சிக்கல்கள் இருக்கும்போது, இதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு, ஒரு ஜோடி, ஒன்றாகவும், மகிழ்ச்சியாகவும், பணியாற்றி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. கேரளாவை சேர்ந்த இந்த காதல் தம்பதிதான், அம்மாநில அரசு போக்குவரத்து பஸ்ஸில் வேலைபார்த்து வருகிறார்கள்.. அவர்கள் பெயர் கிரி - தாரா... இதில், கிரி டிரைவராக உள்ளார்.. தாரா கண்டக்டராகவும் பணியாற்றி வருகிறார்.. ஆனால், இவர்கள் பணிபுரியும் பேருந்துகள் போல இது சாதாரணமானது இல்லை..
எல்இடி போர்டு
அந்த பஸ்ஸில் பயணிகள் பாதுகாப்பிற்காக மட்டும் 6 சிசிடிவி கேமிராக்கள், அவசரகால சுவிட்சுகள், பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள், உள் அலங்காரம் போன்றவை செய்யப்பட்டுள்ளன.. அதேபோல, பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்இடி போர்டு வசதியும் இந்த பஸ்ஸில் உள்ளது. இந்த பஸ் மிகவும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியையே செலவிட்டு உள்ளனர்... இதனால், இந்த தம்பதிக்கென்று தனி ரசிக பட்டாளமே உள்ளனர்.
விடிகாலை டியூட்டி
இந்த பஸ்ஸில் வழக்கமாக பயணிப்பவர்கள் தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி உள்ளனர்... இந்த பஸ் பற்றின வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. வீடியோ வெளிவந்ததுமே, கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்து உள்ளனர். இதை பற்றி தாரா சொல்லும்போது, "தினமும் நாங்கள் விடிகாலை 1.15 மணிக்கு எழுந்துவிடுவோம்.. 2 மணிக்கு பஸ் டெப்போவுக்கு செல்வோம். பிறகு, பஸ்ஸை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார் கிரி.. அதற்கு பிறகு, எங்களுடைய டியூட்டி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என்று புன்னகைத்தவாறே சொல்கிறார் தாரா..
ஸ்டிராங் காதல்
இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. உருகி உருகி காதலித்துள்ளனர்.. 20 வருட ஸ்டிராங் காதலாம் இது.. கிரிக்கு 26 வயது இருக்கும்போது, தாராவுக்கு வயது 24... இருவரும் நேருக்கு நேர் பார்த்த உடனேயே காதலில் விழுந்துள்ளனர்.. இவர்களின் காதலுக்கு, 2 பேரின் வீட்டிலும் உடனே ஓகே சொல்லவில்லை.. எனினும், பெரியவர்களை சம்மதிக்க வைக்க காதலர்கள் மெனக்கெட்டனர்..
போலாம் ரைட்
இதற்கு பிறகு, ஒருவழியாக இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்திலும் ஓகே சொல்ல முயன்றபோது, திடீரென ஜாதகம் ஒத்து போகவில்லை என்று சொல்லி விட்டார்களாம்.. அதை ஒருவழியாக சமாளித்து முடிப்பதற்குள் கொரோனா லாக்டவுன் ஆரம்பித்துவிட்டது.. எனினும், அந்த லாக்டவுனிலேயே இரு வீட்டு சம்மதத்துடன், திருமணம் நடந்துள்ளது.. பல தடைகளை கடந்து கரம்பிடித்துள்ள இந்த காதல் ஜோடியின் வாழ்க்கை பயணம், அரசு பஸ்ஸிலும் வெற்றி நடை போட்டு வருகிறது.. போலாம் ரைட்..!