'கிங்' இல்லை... 'கிங் மேக்கர்'.. ஆட்சியை பிடிக்க முடியாது... கேரளாவில் திட்டத்தை மாற்றும் பாஜக
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று முதலில் நம்பிக்கையுடன் இருந்த பாஜக, இப்போது ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங்மேக்கராக உருவெடுப்போம் என்று மாற்றிப் பேச தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் இணைந்து கேரளாவிற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து வரும் மே 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க பல்வேறு கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரளா அரசியல்
கேரளாவை பொறுத்தவரை இப்போது வரை அங்கு இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது வரை அங்கு செல்வாக்கு உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகளும் மிக வலுவாகவே உள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளில் இடதுசாரிகளே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக முயற்சி
அதேநேரம் பாஜக நுழையவே முடியாத வெகு சில மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. மேலும், அங்குப் பிராந்திய கட்சிகளும் வலுவாக இல்லை. இதனால் மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பாஜக, அதற்கான காய்களை நகர்த்தியது. மேட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரனை கட்சியில் இணைத்து அவரை முன்னிறுத்தி கேரளாவில் பிரசாரத்தை மேற்கொள்கிறது பாஜக!
தீவிர பிரசாரம்
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரும் தீவிரமாகக் கேரளாவில் பிராசாரம செய்கின்றனர். இருந்தாலும், அவர்கள் வருகை பெரியளவில் கேரளாவில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. கேரளா மக்களின் சாய்ஸில்கூட பாஜக இப்போதும் இடம் பெறவில்லை. இதனால் பாஜக தனது திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளது.
திட்டத்தில் மாற்றம்
அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்தும் பலனில்லை, வெற்றி பெற முடியாது என்பதால் வெல்லக் கூடிய தொகுதிகளை மட்டும் குறிவைத்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது பாஜக. ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அப்பகுதியைச் சுற்றியுள்ள தொகுதிகளில் இந்துக்கள் வாக்கு அதிகம் என்பதால், அந்த தொகுதிகளைக் குறிவைத்துள்ளது பாஜக.
கிங் இல்லை கிங் மேக்கர்
பாலக்காடு தொகுதியில் பிரசாரம் செய்த ஸ்ரீதரன், "தொழிற்சாலைகள் மட்டுமே கேரளாவுக்கு வளர்ச்சியை தரும். இங்கு வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நாம் உருவாக்கித் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று வேலைவாய்ப்புகளைக் குறிவைத்தே பேசினார். மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக நல்ல அளவில் தொகுதிகளில் வெல்லும் என்றும் அடுத்து ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாய்ப்பு இருக்கா?
கேரளாவில் பாஜக வெல்ல முடியாது என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் மீது அதிருப்தி அலை இல்லை. அப்படி அதிருப்தியில் இருக்கும் சிலருக்கும் மாற்றாக அங்குக் காங்கிரஸ் வலுவாக உள்ளது. இதனால் தேர்தலில் பாஜகவால் கிங் ஆக மட்டுமல்ல கிங் மேக்கராக உருவெடுப்பதும் கடினம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.