பிஎஃப்ஐ தடை மட்டும் போதாது.. ஆர்எஸ்எஸ்-க்கு தடை விதிக்க வேண்டும்.. காங். எம்பி கொடிக்குனில் சுரேஷ்!
திருவனந்தபுரம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தால் மட்டுமே போதாது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் என்று கேரளா காங்கிரஸ் எம்பி கொடிக்குனில் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பிஎஃப் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த செப். 22-ம் தேதி, பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
கேரளா, உத்தரப் பிரதேசம் என்று 10 மாநிலங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
முக்தி கொடுப்பதாக உயிருடன் ஒருவருக்கு சமாதி கட்டிய சாமியார்கள்.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
பிஎஃப்ஐ போராட்டம்
இதனைத்தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
247 பேர் கைது
தொடர்ந்து உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிஎஃப்ஐ-க்கு தடை
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்-க்கும் தடை விதிக்க வேண்டும்
இந்த நிலையில் கேரளா மாநிலம் மலப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கொடிக்குனில் சுரேஷ் கூறுகையில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தால் மட்டும் போதாது. ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் இந்து மதவாதத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு பரப்பி வருகிறது. இதனால் பிஎஃப்ஐ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்பும் சமமான ஒன்றுதான். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.