சித்திரை விஷூ: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு... பக்தர்களுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: சித்திரை விஷூ வழிபாட்டுக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது. ஏப்ரல் 15ல் சித்திரை விஷூ வழிபாடு நடைபெற உள்ளது.
கொரோனா பரவலால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளுன் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விஷூ வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சித்திரை விஷூ வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது.

இன்று நடை திறப்பு
அதன்படி கோவிலில் ஏப்ரல் 15ல் சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து மூலவருக்கு விளக்கேற்றுவார். அதன்பிறகு 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். அதன்பிறகு வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சிறப்பு பூஜைகள்
இதையடுத்து நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற உள்ளது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை விஷூ வழிபாடு
ஏப்ரல் 15ல் சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் காய், கனி அலங்காரத்தில் அய்யப்பனை தரிசிக்க முடியும். காலை 7 மணி வரை பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் கைநீட்டம் வழங்குவர். ஏப்ரல் 18 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் அனுமதி
முன்னதாக சித்தரை விஷூவையொட்டி நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications