மதுவில் போதையை கலந்து கொடுத்து சுயநினைவை இழக்க வைப்பார்கள்- என்ஐஏவிடம் கக்கிய சிவசங்கரன்
மது விருந்து நடக்கும் போது மதுவில் போதையை கலந்து கொடுத்து சுய நினைவை இழக்க வைத்து விடுவார்கள் என்று தங்கக்கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை பிடியில் சிக்கியுள்ள சிவசங்கரன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கு கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக உள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 25 மணிநேரத்திற்கும் மேலாக என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்வப்னாவின் வீட்டில் மது விருந்து நடக்கும் போது தான் பங்கேற்பேன் என்றும், அப்போது மதுவில் போதையை கலந்து கொடுத்து சுய நினைவை இழக்க வைத்து விடுவார்கள் என்றும் என்ஐஏ அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது தங்கக்கடத்தல் வழக்கு. தங்கம் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னாதான் இப்போது கேரளாவில் ஹாட் டாபிக். என்ஐஏ விசாரணையில் தோண்ட தோண்ட பூதம் புறப்படுகிறது. தீவிரவாத தொடர்பு, சினிமாவிற்கு பினாமி பைனான்ஸ் என தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அப்ப தான் நைட் டூட்டி முடிஞ்சது.. வெளியே வந்த நர்ஸ்.. இழுத்து கொண்டு போய்.. அலறி போன அமெரிக்கா!
பிளாட் வாங்கிக்கொடுத்த சிவசங்கரன்
பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனிடம் ஜூலை 14ஆம் தேதி மாலையிலிருந்து ஒன்பது மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஸ்வப்னாவின் கணவர் ஜெயசங்கர் பெயரில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகில் ஹெதர் டவரில் ஒரு ஃப்ளாட் புக் செய்து கொடுத்ததாகவும் விசாரணையில் சிவசங்கரன் தெரிவித்திருக்கிறாராம். தங்கக்கடத்தல் கும்பலுடனான தொடர்பு வெட்ட வெளிச்சமாகவே சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்தார் பினராயி விஜயன்.
மாரத்தான் விசாரணை
சில நாட்கள் சிவசங்கரனை ரிலாக்ஸ் செய்யட்டும் என்று விட்டிருந்த என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் இரண்டு நாட்கள் விசாரணைக்கு அழைத்தனர். இரண்டு நாட்கள் 20 மணிநேரம் சராமரி கேள்விகளால் துளைத்து எடுத்தனர். அந்த விசாரணையில் பல உண்மைகளை தெரிவித்துள்ளார் சிவசங்கரன். தங்கக்கடத்தல் கும்பலுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
சிவசங்கரனிடம் பெற்ற வாக்குமூலங்களை படித்துக்காட்டிய அதிகாரிகளிடம் அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்றும் தெரிவித்துள்ளனர் என்ஐஏ அதிகாரிகள். தலைமைச் செயலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு சிவசங்கரன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
குற்றவாளிகளுடன் நட்பு
சிவசங்கரன் உடன் நட்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் கூட்டாளிகள் அவரை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டார்களா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தங்கக்கடத்தல் குற்றவாளிகளுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறியுள்ளார் சிவசங்கரன் ஐஏஎஸ்.
சுய நினைவு இல்லை
இதனிடையே ஸ்வப்னாவும் அவரது கூட்டாளிகளும் அவ்வப்போது மது விருந்து கொடுப்பார்கள் என்றும் அந்த விருந்தின் போது மதுவில் போதை மருந்து கலந்து கொடுத்து சுயநினைவு இழக்க வைத்து விடுவார்கள் என்றும் சிவசங்கரன் கூறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்வப்னா புற்றில் இருந்து இன்னும் எத்தனை பாம்புகள் கிளம்பப்போகிறதோ பார்க்கலாம்.